கரும்பு காட்டிலிருந்து யானை வந்தது.. ஆனால் ஆணையை காணோம்.. சின்னத்தம்பியை நாளை பிடிக்க முடிவு
Recommended Video
திருப்பூர்: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பி கரும்பு காட்டுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டாலும் அவனை இன்று பிடிக்கவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்து வரகழியாறு வனப்பகுதியில் விட்டுள்ளனர். ஆனால் அந்த யானையோ விட்ட வேகத்தில் 100 கி.மீ. தூரம் நடந்தே வந்து மீண்டும் உடுமலைக்குள் நுழைந்தது.
எனினும் யாருக்கும் எவ்வித தொந்தரவையும் அந்த யானை கொடுக்கவில்லை. இந்நிலையில் அந்த யானையை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்படுகிறது.
அந்த யானையை நிரந்தரமாக முகாமில் வைப்பதா, காட்டுக்குள் விடுவதா என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதுகுறித்த இறுதி முடிவை தலைமை வனப் பாதுகாவலர் எடுக்க வேண்டும். சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கண்ணாடிபுதூர் கரும்பு காட்டில் உள்ள சின்னத்தம்பியை சமதள பகுதிக்கு வரவழைத்து மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி காலை முதலே சின்னத்தம்பியின் வருகைக்காக காத்திருந்தனர். அவன் கரும்பு காட்டில் இருந்து வெளியே வந்துவிட்டான்.
இந்த நிலையில் அவனை பிடிப்பதற்கான ஆணையை உயர் அதிகாரிகள் கொண்டு வர தாமதமாகியுள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் யானைக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்பதால் இன்று சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. நாளை மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் ஆயத்தமாகியுள்ளனர்.