கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ்! அவிநாசி பஸ் ஸ்டாண்டில் முதல்வர் தந்த நம்பிக்கை வார்த்தை!
திருப்பூர்: கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தன்னிடம் கோரிக்கை வைத்த மாணவர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் எதிர்காலம் தான் நாட்டின் எதிர்காலம் எனவே மாணவர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களால் போடப்பட்ட திட்டங்களால் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. நீண்ட நாட்களாக வைக்கப்பட்ட கோரிக்கையான அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக அவிநாசி பகுதி போராட்டக்குழுவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வாக்குறுதி கொடுத்து நிதியும் ஒதுக்கி தந்தார்கள்
துவக்கி வைப்பேன்
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு மாநில அரசின் நிதியை மட்டும் கொண்டு ரூ.1652 கோடியில் நானே அடிக்கல் நாட்டினேன். நான் மீண்டும் முதல்வராக தொடர்ந்து வந்து திட்டத்தையும் துவக்கி வைப்பேன்.
அடுகுமாடி வீடுகள்
விவசாயிகளின் கோரிக்கையான ஏரி, குளங்கள் தூர்வார, குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொது மக்களின் சிரமங்களைக் குறைக்க இப்பகுதியில் 4 அம்மா கிளினிக் திறந்துள்ளோம். ஏழை எளிய மக்களுக்காக கிராமப்புறங்களில் கான்கிரீட் வீடுகள் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் திட்டம்
அவிநாசி பகுதியில் ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக அவிநாசியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக ரூ.58.15 கோடியில் அன்னூர், அவிநாசி, மோபிரி பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், அதேபோல சூலூர், அவிநாசி, திருப்பூர் பகுதி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
கடன் தள்ளுபடி
வாகன நெருக்கடியை குறைக்கும் விதமாக அவிநாசி- மங்கலம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் துயரங்களை துடைக்கும் வகையில் தற்போது பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 10 நாள்களுக்குள் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் என்றார்.
நிறைவேற்ற நடவடிக்கை
அப்போது அங்கு கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் எதிர்காலம் தான் நாட்டின் எதிர்காலம் எனவே மாணவர்களின் கோரிக்கையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பின்னர் அவர், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.