திருப்பூரில் வெளுத்த மழை.. நொய்யல் ஆற்றில் தெறி வெள்ளம்... மக்கள் ஹேப்பி.. வாகன ஓட்டிகளுக்கு கஷ்டம்!
திருப்பூர், கோவையில் கொட்டித்தீர்த்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
திருப்பூர்: தென்மேற்குப் பருவமழை தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. திருப்பூர், கோவை, தேனி, மதுரையில் வியாழக்கிழமை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. திருப்பூரில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் பெருகெடுத்தது. சாலைகளில் பெருகிய வெள்ள நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவ மழை காரணமாக 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அந்த கணிப்பு பொய்யாகவில்லை பல மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது மழை.
திருப்பூர் மாநகர் பகுதிகளான தெற்கு தோட்டம், போயம்பாளையம், சங்கிலி பள்ளம், ஜமனைப் பள்ளம் ஆகிய பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாலைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்தது.
கர்நாடகாவில் ரூ. 2,000 கோடிக்கு ஊழல்...பாஜக அரசு மீது காங்கிரஸ் எழுப்பும் புதிய பூதம்...!!
இதே போல தென்மாவட்டங்களிலும் மாலை முதலே இடியோடு மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் நேற்று 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார், இனாம் மணியாச்சி, திட்டங்குளம், இளையரசனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய ஊர்களில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெள்ளம் பெருகியது. தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு ஊர்களில் தென்மேற்கு பருவமழையால் நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.