சாலையின் மறுபக்கம் சென்ற லாரி.. கேரள பஸ் மீது மோதியது எப்படி? திருப்பூர் கோரவிபத்தின் திடுக் பின்னணி
Recommended Video
திருப்பூர்: சாலையின் நடுவே தடுப்பு.. இந்தப் பக்கம் இரண்டு வாகனங்கள், அந்தப் பக்கம் இரண்டு வாகனங்கள், என பயணிக்கும் வசதி கொண்ட நான்கு வழிச்சாலை... அப்படி இருந்தும் எப்படி எதிரெதிர் திசையில் சென்று கொண்டிருந்த இரு வாகனங்கள் மோதி திருப்பூர் அருகே கோர விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரத்திற்கு நேற்று இரவு 8 மணிக்கு கேரள அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. அந்த சொகுசு பேருந்தில் மொத்தம் 48 பயணிகள் இருந்தனர்.
நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்கள் உற்சாகமாக டாட்டா காட்டிவிட்டு கிளம்பி இருந்தனர்.
மோசம்
அதிகாலை 3.15 மணி இருக்கும். பயணிகள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, எதிர் திசையில் சென்று கொண்டு இருந்த ஒரு கண்டெய்னர் லாரி, அப்போது, இந்த பஸ் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அந்த அதிர்ச்சியிலும், மரண ஓலத்திலும்தான், சிலர் கண் விழித்தனர். பலர் கண் விழிக்காமல் அப்படியே நீண்ட உறக்கத்தை தழுவினர். ஆம்.. இந்த கோர விபத்தில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 20 தாண்டியுள்ளது.
மிக மோசம்
காலை 7 மணிக்கெல்லாம் எர்ணாகுளம் சென்று சேர்ந்து விடுவோம் என்று நினைத்துக்கொண்டு இரவு கண்ணயர்ந்த பல பயணிகளுக்கும், அதுதான் கடைசி பயணமாக இருக்கப் போகிறது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. விபத்து என்றால் சாதாரணமான விபத்து கிடையாது. மிக கோரமான விபத்து, உடல்கள் தனித்தனியாக துண்டாகி, நசுங்கி, மிக மோசமாக, ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியாகியுள்ளனர். பலருக்கு கை, கால்கள் என பல உறுப்புகள் துண்டாகி மருத்துவமனைகளில் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
டைல்ஸ் லாரி
இந்தக் கோர விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோவையிலிருந்து டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றுள்ளது அந்த கண்டைனர் லாரி. நான்கு வழி சாலை என்பதால், முடிந்த அளவுக்கு வேகத்தில் சென்றுள்ளார் லாரி டிரைவர். அவிநாசி அருகே சென்ற போதுதான் திடீரென லாரியின் டயர் வெடித்துள்ளது. அதிக பாரம் ஏற்றிச் சென்றதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பஸ் மீது சரிந்த லாரி
டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பில் மோதி சாலையின் மறுபுறமாக கவிழ்ந்துள்ளது. ஆனால் பஸ் பயணிகளின் கெட்ட நேரம், அந்த நேரமாக பார்த்து எதிர்திசையில் அவர்கள் பயணித்த பேருந்து சென்று கொண்டிருந்தது. லாரி கவிழவும், பஸ் அங்கு வரவும் சரியாக இருந்துள்ளது. அதிகப்படியான எடையுடன் கூடிய அந்த லாரி பஸ்சின் மீது படாரென்று விழுந்தது. அந்த வேகத்தில் பஸ்சின் வலது பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கி விட்டது. எனவேதான் இந்த கோர விபத்தில் பஸ்சில் வலது பக்கமாக பயணித்த பலரும் பலியாகி உள்ளனர். டிரைவர், நடத்துனர் உள்ளிட்டோரும் இந்தக் கொடூரத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லையாம்.
கண்காணிப்பு
பஸ் மிகமோசமாக நொறுங்கியதன் காரணத்தால்தான் உள்ளே சிக்கி இருந்த பலியான உடல்களை மீட்பதிலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. ஜன்னல்களை உடைத்து அதன் வழியாக மிகவும் கஷ்டப்பட்டு தான் பயணிகளை மீட்டு உள்ளனர், போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள். இப்படித்தான் அங்கு விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை, தடுப்பதற்கு தீவிர வாகன தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் எழுந்துள்ளது.