வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஓகே...முக்குலத்தோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கொடுங்க...கருணாஸ் கோரிக்கை!
திருப்பூர்: வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
சசிகலா விடுதலையை உண்மையான அதிமுகவினர் வரவேற்பார்கள், அவரை பிடித்தவர்கள் அவரோடு செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.பின்னர் நிருபர்களிடம் பேசிய கருணாஸ் கூறியதாவது:- முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானது அல்ல. அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது.
ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த தேர்தலில் எங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று கேட்போம். சசிகலா விடுதலையை உண்மையான அதிமுகவினர் வரவேற்பார்கள், அவரை பிடித்தவர்கள் அவரோடு செல்வார்கள். கட்சியில் சலசலப்பு ஆகுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கருணாஸ் தெரிவித்தார்.