காவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு
உடுமலை: ஆன்லைன் மூலம் காவிரியின் நீர் வளத்தை அளவிட திட்டம் செயல்படுத்துவது குறித்து, அமராவதி அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் காவிரி ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு நடத்தினர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அறிவுறுத்தலின் படி, துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றத்தை கணக்கிட அமைக்கப்படும், ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உள்ளனர்.
கர்நாடகம்,தமிழகம்,புதுவை மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கொண்ட இந்த துணைக்குழு உரிய ஆய்வு நடத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பகுதியிலும், முக்கிய நீர்பிடிப்பு பகுதியான தேனாறு, பாம்பாறு, சின்னாறு சேரும் இடமான ஜீரோ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று காவிரி நீர் ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மேலும் அமராவதி அணையின் உள்பகுதி, அமராவதி பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் நடந்தே சென்று பல்வேறு ஆய்வுகளை இக்குழுவினர் மேற்கொண்டனர். காவிரி நீர் பங்கீட்டின் போது அமராவதி அணைக்கு வரும் நீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்புப் பொறியாளர் மோகன் முரளி, புதுவை பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், கேரள மாநில பாசன உதவி இயக்குநர் சஜ்வீப்குமார், இந்திய வானிலை அறிவியலாளர் அமுதா, அமராவதி அணை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்தினர்.
ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை இணை ஆணையர் மோகன் முரளி, இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் காவிரி நீரை பயன்படுத்தும் மாநிலங்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தான் என்றார்.
காவிரி ஒழுங்காற்று துணை குழுவினர் கர்நாடகாவில் 4 அணைகள் மற்றும் தமிழகத்திலுள்ள 3 அணைகளில் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் கேரளாவிற்கு சென்று அங்குள்ள அணைகளிலும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்
இந்த ஆய்வுகளுக்கு பின்னர் காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.