அரசுப் பள்ளி மாணவர்களும் இந்தி கற்க வேண்டும்... ஆசையை பகிர்ந்த எல்.முருகன்
திருப்பூர்: அரசு பள்ளி மாணவர்களும் இந்தி கற்க வேண்டும் என்பது தான் தமது விருப்பம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எல்லா விவகாரங்களிலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாகவும், மாணவர்கள் உயிருடன் விளையாடக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். திருப்பூரில் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் உணர்ச்சியை தவறாக சிலர் திசை திருப்புவதாக குற்றஞ்சாட்டினார்.
நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வு என்றும், தமிழகத்தில் புதிதாக 15 மருத்துவ கல்லூரிள் வர உள்ள சூழலில், தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும் கூறியிருக்கிறார்.
"இந்தி தெரியாது போடா".. தமிழக ஸ்டைலில் அதிரடி.. டி சர்ட் போட்ட பிரகாஷ் ராஜ்!
கூட்டணியை பொறுத்தவரை அதிமுக-பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நீட் தேர்வு தொடர்பாக மாநில அரசு கொண்டு வந்துள்ள 10% உள் இடஒதுக்கீட்டை வரவேற்வதாகவும் தெரிவித்தார். தனியார் பள்ளி மாணவர்களை போல் அரசு பள்ளி மாணவர்களும் இந்தி கற்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு எனக் கூறியுள்ளார்.
மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக பாஜக திகழ்ந்ததை அடிப்படையாக வைத்தே 60 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என தாம் கூறியதாக விளக்கம் அளித்தார்.