ஷாக்கிங்.. "சொந்த ஊருக்கு எங்களை அனுப்புங்க".. திருப்பூரில் டயரை எரித்த வடமாநில தொழிலாளர்கள்!!
திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் டயர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர்: வடமாநிலங்களில் மட்டுமே வெடித்து வந்த வேதனை தமிழகத்திலும் ஆரம்பமாகி உள்ளது.. "சொந்த ஊருக்கு எங்களை அனுப்புங்கள்" என்று நியூ திருப்பூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.. நடுரோட்டில் டயர்களை வைத்து எரித்து மறியலில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ளது நியூ திருப்பூர் பகுதி.. இங்கு நேதாஜி ரெடிமேட் பார்க் அதாவது (நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா) செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டை பூங்காவிற்குள் 50க்கும் மேற்பட்ட பின்னலாடை எக்ஸ்போர்ட் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் 80 சதவீதத்திற்கும் மேல் வட மாநில தொழிலாளர்கள்தான்.. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான, பழங்கரை, நியூ திருப்பூர், பெருமாநல்லூர் போன்ற இடங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்தும் வருகின்றனர்.
கம்பெனிகள்
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே முதல்தடவையாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனிலேயே இவர்களுக்கு வேலை இல்லை.. அதனால் எப்படியும் ஊரடங்கு முடிந்ததும் கம்பெனிகள் திறந்துவிடுவார்கள், வேலை திரும்ப கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தனர்.. ஆனால் நீட்டிக்கப்பட்டதும் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகினர்.. சம்பளம், வருமானம் இல்லாமல் இவர்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் சிரமப்பட்டனர்.
வடமாநில தொழிலாளர்கள்
இந்நிலையில் அவர்களால் ஒரு அளவுக்கு பொறுக்க முடியாமல், இன்று அங்கு வேலைபார்த்து வந்த அனைத்து வடமாநில தொழிலாளர்களும் நெடுஞ்சாலையில் ஒன்று சேர்ந்துவிட்டனர்.. சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று முழக்கமிட்டனர்.
தடுத்து நிறுத்தினர்
பின்னர் டயர்களை எல்லாம் நடுரோட்டில் போட்டு எரித்து எதிர்ப்பை காட்டினர்.. இதையடுத்து, நியூ திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியிலும் போராட்டம் செய்ய கிளம்பினர்.. ஆனால் அதற்குள் பெருமாநல்லூர் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர்.. மேலும் அவர்கள் வேலை செய்யும் அந்த பின்னலாடை நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு அவர்களையும் நேரில் வரவழைத்தனர்.. தற்போது அனைவரும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசி வருகிறார்கள்.
வேதனை
நடுரோட்டில் டயர்களை குவித்து எரிக்க தூண்டியதாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.. முன்னதாக நடடந்த இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. வடமாநிலங்களில் மட்டுமே தொழிலாளர்கள் இப்படி ஆர்ப்பாட்டமும், போராட்டமும் செய்த நிலையில் தமிழகத்திலும் இவ்வாறு நடந்துள்ளது வேதனையை தந்து வருகிறது. ஊரடங்கு நீட்டித்ததில் இருந்தே திருப்பூரை சற்றியுள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video
சமூக விலகல்?
சில தினங்களுக்கு முன்புகூட திருப்பூர் பிச்சம்பாளையம்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.. அப்போதே அவர்கள் சமூக இடைவெளி இன்றி குவிந்து இருந்தனர்... தற்போதும் இவர்கள் திரண்டுள்ளதால் அடுத்தக்கட்ட கலக்கமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.