அவினாசி விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் கைது.. விபத்து குறித்து பரபரப்பு தகவல்
திருப்பூர்: 19 பேர் பலியான அவினாசி விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். தூக்க கலக்கத்தில் கண்டெய்ணரை ஓட்டுனர்ர் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் கேரள அரசின் சொகு பேருந்து எர்ணாகுளத்திற்கு 11 பெண்கள், 37 ஆண்கள் உள்பட 48 பேருடன் புறப்பட்டது. அதிகாலை 3.10 மணி அளவில் திருப்பூர் மாவட்ம் அவிநாசி அருகே ராக்கி பாளையம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே கேரளாவில் இருந்து சேலம் நோக்கி டைல்ஸ் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி திடிரென நிலைதடுமாறி ஓடி அதிவேகமாக சென்டர் மீடினை உடைத்து எதிர் திசை ரோட்டுக்கு வந்தது. அப்போது லாரியில் இணைக்கப்பட்டிருந்த ராட்சத கண்டெய்னர் எதிரே வந்து கொண்டிருந்த கேரள பேருந்து மீது சாய்ந்து விழுந்தது. இதில் பேருந்தின் வலதுபுறம் அப்பளம் போல் நொறுங்கியது.
அடையாளம் காணப்பட்டது
இந்த விபத்தில் பேருந்து டிரைவர், 4 பெண்கள், உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்த 19 நபர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாலக்காட்டை சேர்ந்த ரோஷ்லி , ராகேஷ், எர்ணாகுளத்தை சேர்ந்த நடத்துனர் கிரிஷ், திருச்சூரை சேர்ந்த நசீப் முகமது அலி, ஹனீஸ், இக்னி ரபேல், நிலக்கல்லை சேர்ந்த கிரண் குமார், ஜிஸ்மான் ஷாஜு ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், பேருந்து நடத்துனர் பைஜு ,சிவகுமார், ஐஸ்வர்யா, கோபிகா, ஜேசுதாஸ், சிவசங்கர், அனு, சனூப், மேத்யூ ஆகிய 19 பேரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வரவழைப்பு
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்கள் குறித்த தகவல்களை அறிய அவர்களது உறவினர்கள் 7708331194 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் 19 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உடல்களை கொண்டு செல்வதற்காக கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸுகள் வரவழைக்கப்பட்டிருந்தது.
10 லட்சம் இழப்பீடு
கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கே.கே .சசிந்திரன், விவசாய துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், பாலக்காடு லோக்சபா எம்பி வி.கே. ஸ்ரீகண்டன், ஆலத்தூர் எம்.பி ரம்யாஹரிதாஸ், பாலக்காடு எம்எல்ஏ ஷாபிபரம்பில், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் கே.பாலமுரளி, காவல் கண்காணிப்பாளர் ஜி.சிவவிக்ரம் மற்றும் மருத்துவக் குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்க வந்து முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். உயிரிழந்த போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. காப்பீடு மூலம் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இதேபோல் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூக்க கலக்கத்தில்
இதனிடையே ஈரோடு அருகே தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் ஹேம்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விபத்து குறித்து கூறுகையில், கேரளாவில் இருந்து பாலக்காடு கலெக்டர் தலைமயிலலான குழுவினர் வந்தனர். அவர்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்களை அடையாளம் கண்டு பெற்றுச்சென்றனர். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. கண்டெய்னர் லாரியை தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதே விபத்துக் காரணம் என தெரியவந்துள்ளது" என்றார்.