மலைகிராமங்களுக்கு 7 கி.மீ. நடக்கும் திமுக எம்.எல்.ஏ... நெகிழும் மலைவாழ் மக்கள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் திமுக எம்.எல்.ஏ.ஜெயராமகிருஷ்ணன், தனது தொகுதிகுட்பட்ட மலைவாழ் மக்களை சந்திக்க சுமார் 7 கி.மீ.தூரம் நடந்தே சென்று வருகிறார்.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது அந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுப்பதுடன், அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்.
தற்போது கூட கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மருந்தை மலைவாழ் மக்களுக்கு வழங்கியுள்ளார்.
பிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை கலைக்க வேண்டும்... தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மடத்துக்குளம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெயராமகிருஷ்ணன். இவரது தொகுதியான மடத்துக்குளத்தின் எல்லை வால்பாறையை ஒட்டி உள்ளது. இடையே உடுமலைப்பேட்டை தொகுதி வந்தாலும் கூட மலைகிராமங்களின் அடிப்படையில் இந்த எல்லைக்கோடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலைகிராமங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே காரில் செல்ல முடியும்.
யாரும் சென்றதில்லை
மடத்துக்குளத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள காடம்பாறை, கருமுட்டி, குருமலை மேல்குருமலை உள்ளிட்ட மலைகிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் நடந்து தான் செல்ல வேண்டும். அதுவும் 5 கி.மீ. முதல் 7 கி.மீ.வரை வனப்பகுதிக்குள் நடந்தால் தான் இந்த மலைகிராமங்களை அடைய முடியும். இதனாலேயே இந்த மலைவாழ் மக்களை சந்திக்க அவர்களின் குறைகளை கேட்க எந்த அதிகாரிகளும் அங்கு செல்வதில்லை.
தொடர்ந்து சந்திப்பு
இதனிடையே மடத்துக்குளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து மூன்று முறை இந்த மலை கிராமங்களுக்கு சென்று நிவாரண உதவிகள் வழங்கியதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மருந்தை வழங்கியுள்ளார். மேலும், அந்த மக்களுக்கு பொதுக் கழிவறை கட்டித் தரவும், ரேஷன் பொருட்கள் எளிதாக சென்றடையவும் ஏற்பாடு செய்து வருகிறார்.
உற்சாக வரவேற்பு
தங்களை சந்திக்க இதுவரை எந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வராத நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் இந்த மலைகிராம மக்களை தேடிச் சென்று சந்தித்து குறைகள் கேட்பது அவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தங்களுக்காக சிரமப்பட்டு நடந்து வரும் எம்.எல்.ஏ.வுக்கு ஒவ்வொரு முறையும் அந்த மக்கள் உற்சாக வரவேற்பு தருவது குறிப்பிடத்தக்கது.