ஹெல்மெட்டுடன் புகுந்த திருடன்.. கத்தியை காட்டி மிரட்டி 10 பவுன் நகை கொள்ளை.. பரபர சிசிடிவி காட்சி!
திருப்பூர்: திருப்பூரில் பட்டபகலில் நகை அடகுக் கடை ஒன்றில் ஹெல்மெல் அணிந்து வந்த திருடன், அரிவாளைக் காட்டி ஊழியர்களை மிரட்டி 10 பவுன் நகை, ரூபாய் 20 ஆயிரத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பேக்கரி பிஸ்கட் சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி,மயக்கம்.. விழுப்புரத்தில் பரபரப்பு..என்ன நடந்தது?
திருப்பூர் மாநகராட்சி குமரன் சாலை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தனியார் நகை அடகு கடை இயங்கி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கடைக்குள் ஹெல்மெட் அணிந்தபடி நுழைந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி உள்ளார்.
நகை அடகு வைப்பவர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். அரிவாளைக் கொண்டு மிரட்டியதால் ஊழியர்கள் அச்சம் அடைந்து செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதுகுறித்து நகை அடகுக் கடை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த விசாரணை நடத்தினர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த அழகுராஜா (35) என்பது தெரியவந்தது.
மேலும், சிறுபூலுவபட்டி பகுதியில் தங்கியிருந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அடகுக்கடை ஊழியர்களை அரிவாளால் மிரட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.