அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கார் முற்றுகை... அதிமுகவினர் ஆவேசம்
திருப்பூர்: கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் காரை முற்றுகையிட்ட அதிமுகவினர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தன்னிச்சையாக செயல்படுவது ஏன் என சரமாரி கேள்வி எழுப்பினர்.
உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட குரல்குட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தரப்புக்கும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்புக்கும் போட்டி இருந்து வருகிறது.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செயல்படுவதாக கூறி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
காது குடையும் குச்சியில் அடையாள மை... ஊரக உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்
2-ம்கட்ட தேர்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நாளை 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது ஆதரவு பெற்ற பெண் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அவர் காரை மறித்து தகராறில் ஈடுபட்டது பொதுமக்கள் யாருமல்ல முழுக்க முழுக்க அதிமுகவினரே.
இறங்கவில்லை
மலையாண்டிகவுண்டனூர் என்ற இடத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் காரை மறித்த அதிமுகவினர், பொள்ளாச்சி ஜெயராமன் ஏற்கனவே தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தியுள்ள நிலையில் நீங்களும் ஏன் போட்டி போடுகிறீர்கள் என வினவியுள்ளனர். அதனால் திகைத்து போன அமைச்சர் காரை விட்டு இறங்காமலயே அவர்களிடம் பேச்சு நடத்தினார்.
வாக்குவாதம்
அமைச்சருடன் அதிமுகவினர் நடத்தும் வாக்குவாதம் குறித்த தகவலறிந்து அங்கு போலீஸார் விரைந்தனர். பின்னர் கலைந்து செல்லவில்லை என்றால் தடியடி நடத்தப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.
வேறு மாவட்டம்
பொள்ளாச்சியும் உடுமலைப்பேட்டையும் என்னதான் அருகாமை ஊர்களாக இருந்தாலும் மாவட்டங்கள் வேறு. திருப்பூர் மாவட்டத்திற்குள் வரும் உடுமலை பகுதியில், கோவை மாவட்டத்திற்குள் வரும் பொள்ளாச்சி ஜெயராமன் எப்படி ஆதிக்கம் செலுத்தலாம் என கட்சித் தலைமையிடம் புகார் கூறியுள்ளது அமைச்சர் தரப்பு.