காங்கிரசில் இவர்தான் அறிவாளி, ரீ கவுண்ட்டிங் மினிஸ்ட்ர்.. ப.சியை மறைமுகமாக கலாய்த்த மோடி
திருப்பூர்:காங்கிரசில் இருக்கும் ஒருவர் மட்டுமே தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
திருப்பூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைக்க பிரதமர் மோடி, ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உற்சாக வரவேற்பளித்தார். இதனை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். தொடர்ந்து பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடங்கி வைத்த மோடி
நிகழ்ச்சியில், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை மூலம் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.
விமான முனைய அடிக்கல்
சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட நவீனமயமாக்கல் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதேபோல திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பொதுக்கூட்டத்தில் மோடி
அதன் பின்னர் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். இந்தியில் அவர் பேசிய உரையை தேசிய செயலாளர் ஹெச். ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரசின் அறிவாளி
காங்கிரசில் இருக்கும் ஒருவர் மட்டுமே தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். (முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை தான் அவர் அப்படி மறைமுகமாக குறிப்பிடுகிறார்) அவர்தான் தம்மை மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்.
ரீ கவுண்டிங் மினிஸ்டர்
அவரை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அவரை ரீ கவுண்டிங் மினிஸ்டர்.... அதாவது மறுவாக்கு எண்ணிக்கை மினிஸ்டர் என்று கூறுவார்கள். அவர் மக்களை கிண்டல் செய்தார். வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களை கிண்டல் செய்தார் என்று கூறினார்.