மோடிக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பிய வைகோ.. கைது செய்த போலீஸ்.. திருப்பூரில் பெரும் பரபரப்பு!
பிரதமர் மோடிக்கு எதிராக திருப்பூரில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
திருப்பூர்: பிரதமர் மோடிக்கு எதிராக திருப்பூரில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பாக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் மதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
காலை 10 மணியில் இருந்தே இந்த போராட்டம் நடந்து வருகிறது. காலையில் இருந்தே இந்த போராட்டத்தில் நிறைய சலசலப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் புகுந்து பாரத் மாதா கீ ஜே என்று கூவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனை முடிந்த பின் வைகோ நீண்ட நேரம் பாஜகவிற்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கடுமையாக பேசினார். மிக கோபமாக மோடிக்கு எதிராக வைகோ கண்டனங்களை வைத்தார்.
இதனால் போலீஸ் அவரை, இரண்டுக்கும் மேற்பட்ட முறை பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தது. ஆனால் வைகோ பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து மோடி மீதான விமர்சனங்களை வைத்து வந்தார்.
இதனால் அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அமளியில் ஈடுப்பட்ட, மதிமுகவினரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் திருப்பூரில் இருக்கும் மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதேபோல் பெரியார் இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரும் இதில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு கொஞ்சம் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.