திருப்பூர்.. முஸ்லீம் அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்.. போலீசுடன் தள்ளுமுள்ளு
திருப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் நடுவே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நாடு முழுக்க இஸ்லாமியர்கள், இடதுசாரிகள் மற்றும் எதிர் கட்சியினர், தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்திலும் மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்த போராட்டங்களில் இருந்து எதிர்க்கட்சிகள் சற்று விலகி இருந்தன.
ஆனால், திருப்பூரில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ரயிலை மறித்து போராட்டம் நடத்த முற்பட்ட முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.