எங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள்
திருப்பூர்: பணமும் இல்லை, உணவும் இல்லை, குழந்தைகளுடன் அவதிப்படும் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Recommended Video
திருப்பூர் பின்னலாடைத் துறையில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் தொழிலாளர்கள் வந்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களது சொந்த மாநிலத்தில் பெரிய அளவிலான வருமானம் இல்லை.
இதனால் இவர்கள் பிழைப்புக்காக மற்ற மாநிலங்களுக்கு வருகிறார்கள். அதன்படி தற்போது திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு
இவர்கள் பெரும்பாலும் தனியார் பின்னலாடை நிறுவனங்களின் விடுதிகளிலும், தனியாக வாடகைக்கு அறை எடுத்தும் தங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுத்து பின்னலாடை நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தன.
கையில் பணம் இல்லை
இதனை எதிர்பார்க்காத வடமாநில தொழிலாளர்கள் தற்போது மிகப் பெரும் இக்கட்டில் சிக்கி தவிக்கின்றனர். வார சம்பளமாக 2000 முதல் 3000 வரை பெற்ற இவர்கள் வீட்டிற்கு தேவையான அரிசி பருப்பு கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து தங்களது முதல் வாரத்தை கடந்த நிலையில் தற்போது உணவு பொருட்கள் ஏதும் இல்லை. மீண்டும் உணவுப் பொருட்களை வாங்க கையில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.
அறிவிப்பு
தாங்கள் பணிபுரிந்த நிறுவனங்களும் முன்பணம் எதுவும் வழங்க மறுப்பதால் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என புரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ராஜ்குமார் என்பவர் தெரிவிக்கையில் கடந்த வாரம் சம்பளம் கொடுத்த நிலையில் தற்பொழுது எந்தவிதமான உணர்வும் தங்களிடம் இருப்பில் இல்லை.
கோரிக்கை
இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளோம் அரசு தரப்பில் இருந்தும் தங்களுக்கு இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே எங்களை எங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். இல்லாவிட்டால் எங்களது உணவு பிரச்சினைக்காவது ஏதேனும் வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.