பல்லடம் அருகே எஸ்பிஐ வங்கிக் கொள்ளை.. டெல்லியில் பதுங்கியிருந்த கொள்ளையன் கைது
திருப்பூர்: திருப்பூர் எஸ்பிஐ வங்கியில் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் டெல்லியில் பதுங்கியிருந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இதில் கிளை மேலாளர் உள்பட 9 போ் பணியாற்றி வருகின்றனா். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.,21) வேலை நேரம் முடிந்ததும் வங்கி அலுவலர்கள் வங்கியைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் அலுவலா்கள் வங்கியைத் திறந்து பணியைத் தொடங்க ஆயத்தமாயினா். அப்போது வங்கியின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டனர்.
வங்கியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலிகளையும் வெட்டி அறுத்து மர்ம நபர்கள் வங்கியில் புகுந்தது தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு அறையில் இருந்த ரூ 18.90 லட்சம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
மேலும் 3 பெரிய லாக்கர்களில் இருந்த 114 பேரின் பாதுகாப்பு பெட்டகம், வெல்டிங் மெஷினால் அறுக்கப்பட்டு அதில் பொதுமக்கள் வைத்திருந்த 500 சவரன் திருடப்பட்டன. இது தொடர்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் டெல்லியில் ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர். நாளைய தினம் டெல்லியிலிருந்து திருப்பூருக்கு அழைத்து வருவர் என தெரிகிறது.