ஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்!
அரசு பள்ளியை மூட வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பினார்கள் பொதுமக்கள்
அவிநாசி: ஒரே ஒரு குழந்தை மட்டுமே படிப்பதாக கூறி அரசு பள்ளியை அதிகாரிகள் மூடவந்தனர். விஷயம் கேள்விப்பட்ட அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதாவது முதியவர்கள் ஒன்றுதிரண்டு அதிகாரிகளை விரட்டி அடித்துள்ளனர்.
அவிநாசியை அடுத்துள்ள செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாதம்பாளையம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இது 1954ம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளி. ரொம்பவும் பழமை வாய்ந்தது.
முன்பெல்லாம், செம்பியநல்லூர் ஊராட்சிக்கே முதல் மற்றும் ஒரே பள்ளி இதுதான். ஆனால் காலப்போக்கில் சுற்றியுள்ள சில கிராமங்களில் புதிதாக அரசு பள்ளிகள் துவங்கப்பட்டு விட்டதால், இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த 4 வருஷத்தில் 4 பேர், 5 பேர் என்று குறைந்து, இப்போது ஒரே ஒரு குழந்தைமட்டுமே படித்து வருகிறான். அவன் பெயர் சிட்டிபாபு. ஒன்றாம் வகுப்பு படிக்கிறான்.
தலைமை ஆசிரியை
டீச்சர்கள் என்று யாரும் தனியாக கிடையாது. தலைமை ஆசிரியர் பிரேமலதாதான் சிட்டிபாபுக்கு டீச்சராக இருக்கிறார். சத்துணவு ஸ்கூலில் போடுவது இல்லை. சமையலர் கலாமணி வீட்டிலிருந்தே ரோகித்துக்கு ஒரு டிபன் பாக்ஸில் சாப்பாடு எடுத்து வந்து விடுகிறார்.
அதிகாரிகள்
ஒரு டீச்சர், ஒரு மாணவன், என்று இந்த பள்ளி இயங்கவும், அரசு இப்பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளது. இதே இடத்தில் ஒரு நூலகம் அமைக்கவும் திட்டம் போட்டது. இதனால் அதிகாரிகள் ஸ்கூலுக்கு வந்து, ரோகித்திற்கு டிசி கொடுக்க வந்தனர். விஷயம் அறிந்த ரோகித்தின் பெற்றோர், டிசி வாங்க முடியாது, பள்ளியையும் மூட அனுமதிக்கமாட்டோம் என்று அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.
மனு
தகவல் அறிந்து அந்த ஊர் பெரியவர்கள் எல்லாருமே ஒன்று திரண்டு வந்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள். "இந்த ஸ்கூலை மூட விட மாட்டோம்.. வேணும்னா மாணவர் சேர்க்கைக்கு நாங்க உதவி பண்றோம்"என்று உறுதி சொன்னதுடன், கலெக்டரை சந்தித்து இது சம்பந்தமாக மனுவும் தந்தனர்.
6 பேர்
அது மட்டும் இல்லை, ரோகித்தின் பெற்றோர் உட்பட ஊர் பிரமுகர்கள் வீடு, வீடாக சென்று, பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகள், தொலைவில் உள்ள அரசுப்பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த குழந்தைகள் ஆகியோரிடம் பேசி, எப்படியோ புதிதாக 6 பேரை இந்த பள்ளியில் சேர்த்துவிட்டனர். இப்போது இந்த புதிய 6 மாணவர்களுடன் நேற்று ரோகித் சுதந்திர தினம் கொண்டாடினான். புதிய மாணவர்களுக்கு, பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
புலம்பல்
ஊர் ஊருக்கு டாஸ்மாக் மதுபான கடை திறப்பதில் அக்கறை காட்டும் அளவு, அரசு பள்ளிகளை மூடாமல் இருப்பதற்கு காட்டினால் ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதுகாக்கப்படுமே என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறினார்கள்.