ஆஹா.. கம, கமன்னு என்னா வாசம்.. சில்லி சிக்கனை பொரிச்சி எடுத்தா.. அத்தனையும் ஃப்ரீ.. மக்களே ரெடியா?
திருப்பூர்: கறிக்கோழியால் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்ற தவறான தகவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை பொதுமக்களுக்கு பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1800க்கும் அதிகமான கறிக்கோழி பண்ணைகள் இங்கு உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் மாதம்தோறும் 45 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள், சென்னை, மதுரை ஆகிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆட்டு இறைச்சி விலை அதிகமாக இருந்தபோது பெரும்பாலான இறைச்சி பிரியர்கள் கோழி இறைச்சிகளை அதிகளவில் வாங்கி சாப்பிட்டு வந்தனர். இந்த நிலையில், சமீப காலமாக கொரோனா வைரஸ் அச்சத்தால், கறிக்கோழி விற்பனை படிப்படியாக குறைந்து வருகின்றது. இதனால் விலையும் குறைந்து விட்டது.
விலை குறைந்தாலும் பொதுமக்கள் கறிக்கோழிகளை வாங்க தயக்கம் காட்டி வருவதால் இறைச்சி கடை வியாபாரிகள் தற்போது கவலையடைந்துள்ளனர். கறிக்கோழி தொழில் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கின்றது.
சென்னையில் மட்டும் 801.. கொரோனா கண்காணிப்பு வளையத்தில் தமிழகம் முழுக்க 2221 பேர்! வெளியான லிஸ்ட்
சமீபகாலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு பண்ணையாளர்களை நிலைகுலைய வைத்துவிட்டது. கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டத்திற்கும் வெளிமாநிலங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு செல்லப்படவில்ல. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்து விட்டன. இதனையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கறிக்கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது இல்லை என்பதை பொது மக்களுக்கு எடுத்துக்காட்ட முடிவு செய்தனர்.
இதையடுத்து 200 கிலோ சில்லி சிக்கனை சமைத்து, ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். கறிக்கோழி அல்லது முட்டை சாப்பிடுவதால் வைரஸ் தொற்று ஏற்படுவதில்லை என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்கள் பலரும் இதை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.