ஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா? இந்த படத்தை பாருங்கள்.. புரியும்
திருப்பூர்: "இது பெரியார் மண்" என்ற வார்த்தையை சமீபகாலமாக அடிக்கடி நீங்கள் ஊடக விவாதங்களிலும், முகநூல் பக்கங்களிலும் கேட்டும், பார்த்தும் வந்திருப்பீர்கள்.
அத்திவரதரை கண்டு தரிசனம் செய்வதற்கு, அலை அலையாக பக்தர்கள் செல்கிறார்கள். மதுரையில், கள்ளழகர், ஆற்றில் இறங்கும் விழாவில், குண்டுமணி கீழே போட்டால் கூட மண்ணில் விழாத அளவுக்கு பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், இந்துத்துவா பேசும், பாஜகவால் இங்கு காலூன்ற முடியவில்லையே என்ற கேள்விக்கான விடைதான், 'பெரியார் மண்' என்பது.
பக்தி வேறு.., மதம் சார்ந்த அரசியல் வேறு என்பதை மக்கள் பகுத்துப் பார்த்து ஓட்டு போடுவதால்தான், இது பெரியார் மண் என்று பெரியாரிய ஆதரவாளர்கள் அடிக்கடி சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
அதுவும் சமீப காலமாக பெரியார், தொடர்பான சர்ச்சைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. அவ்வப்போது பெரியார் சிலைகள், விஷமிகளால், உடைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு உச்ச நடிகர் அவரைப் பற்றி சமீபத்தில் சர்ச்சையாக பேசினார். அது தேசிய அளவில் விவாதமானது.
இதன் மூலம், தொடர்ந்து, பெரியார் என்ற வார்த்தை புழக்கம், அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கூட, பெரியார் தொடர்பான புத்தகங்கள் அதிகம் விற்பனையானதாக தகவல் வெளியாகியிருந்தது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
தத்துவார்த்த ரீதியாக, நாம் இவ்வாறு பெரியார் மண் என்பதற்கான விளக்கங்களை கொடுத்த போதிலும், இயல்பாகவே நமது மக்களின் வாழ்க்கை முறையில் இது எவ்வாறு இரண்டறக் கலந்து, பின்பற்றப்படுகிறது என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு நல்ல உதாரணம்.
திருப்பூர் மாநகரத்தின் திருவிக நகர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள, பகுதியில் நேற்று குடியரசு தின விழா, தமிழ் புத்தாண்டு விழா போன்றவற்றிற்கு திராவிடர் கழகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதையொட்டி, சாலையோரத்தில் திராவிடர் இயக்க கொடிகள் நடப்பட்டன. பய பக்தியுடன் கூடிய இந்துக்கள் வசிக்கக்கூடிய அந்த தெருவில்.., காலையிலேயே எழுந்து, குளிரையும் பொருட்படுத்தாது கோலம் போடக் கூடிய பெண்களைக் கொண்ட அந்த தெருவில்தான்.., இவ்வாறு கொடிகள் நடப்பட்டிருந்தன.
பரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை
கொடியின் பக்கத்திலேயே கோலம்.., கோலத்தின் பக்கத்தில் கொடி.., இப்படியாக அந்த தெரு காணப்பட்டது. கோலம் போடுபவர்களும், பெரியாரை கொண்டாடுவார்கள். அவருடைய அமைப்பு ஒரு நிகழ்ச்சி நடத்தும்போது எங்கள் வீட்டு வாசலில் எதற்காக கொடி நடுகிறீர்கள் என்று கூட கேட்க மாட்டார்கள் என்பதற்கு திருப்பூர் ஒரு உதாரணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு உதாரணம் இது தான். கோலம் அருகே மண்ணில் ஊன்றப்பட்ட இந்த கொடிகள், பெரியார் மண், என்பதற்கான மற்றொரு அத்தாட்சியும் கூட ஆகும்.