வருகிறார் மோடி.. மதுரைக்கு எய்ம்ஸ் போல திருப்பூருக்கும் திட்டங்களை அறிவிப்பார்.. வானதி
திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10ம் தேதி திருப்பூரில் நடைபெறும் பாஜக மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். அப்போது பல்வேறு திட்டங்களை அவர் அறிவிப்பார் என தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக திருப்பூர் வர இருப்பதால் இதற்கான ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் நடந்தது.
கூட்டம் முடித்து செய்தியாளர்களை சந்தித்தார் வானதி சீனிவாசன் அப்போது கூட்டம் குறித்தும், பிரதமர் மோடியின் அறிவிப்புகள் தொடர்பாகவும் அவர் தகவல்களைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிரமாண்ட தேர்தல் கூட்டம்
பிப்ரவரி 10 ஆம் தேதி பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார். மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 2 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். பொதுக் கூட்ட இடம் தேர்வு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது, இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும்.
கூட்டணி யாருடன்?
லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்த அறிவிப்பை கட்சியின் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும். கூட்டணி தொடர்பான எந்த தகவலையும் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள முடியாது.
ஸ்டாலின் நிலைப்பாடு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிலைப்பாடு இரட்டை நிலைப்பாடு என மக்கள் உணர்ந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். மோடி ஒழிக என்று கூறுவதை விட அவர்களுடைய திட்டங்களை சொல்லி வெற்றி பெறலாம்.
மதுரை போல திருப்பூருக்கும்
தேர்தலில் அரசியல் மாற்றம் என்பது தமிழ்நாட்டிலும் இருக்கும் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும். மதுரைக்கு எய்ம்ஸ் போன்று, அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான அறிவிப்பு திருப்பூர் வருகையின் போது இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வானதி சீனிவாசன் கூறினார்.