சூடுபிடிக்கும் தமிழக சட்டசபை தேர்தல்.. திருப்பூரில் பிரச்சாரம்.. ராகுல் காந்தி வருகை!
திருப்பூர்: திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தரவுள்ளார். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Recommended Video
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 3.30 மணிக்கு அவினாசி வருகிறார்.
இங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர் திறந்தவேனில் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து இங்கிருந்து புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு அனுப்பர்பாளையம் வரும் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கிறது. அங்கும் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள குமரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மாலை 5.45 மணிக்கு திருப்பூர்- பல்லடம் சாலையில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை இரவு தங்குகிறார். ராகுல்காந்தி திருப்பூர் வருவதையொட்டி திருப்பூர் குமரன் நினைவிடம் சுத்தம் செய்யப்படுகிறது. ராகுல் செல்லும் இடங்களில் உள்ள மேடை, வழித்தடங்களை மத்திய உளவுப்பிரிவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் காவல் துறை சார்பிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பொங்கல் பண்டிகையின் போது மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை பார்வையிட ராகுல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.