பேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே!
ரஜினிகாந்த் தனித்து போட்டியிடுவார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்
திருப்பூர்: ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்வரை அதை பற்றி பேசவே மாட்டேன் என்று சொன்ன தமிழருவி மணியன், திரும்பவும் அதை பற்றியேதான் பேசி உள்ளார்... ''ரஜினி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்.. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசித்து வருகிறார்' என்று தெரிவித்துள்ளார்.
மிக சிறந்த அறிவாளி காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்.. நல்ல அரசியல், இலக்கிய ஞானம் உடையவர்.. ரஜினிகாந்த்துக்கு நெருக்கமானவர்.. அவரது ஆலோசகர் என்றுகூட சொல்லப்படுபவர்.
அதனால்தான் கடந்த வாரம் தமிழருவி மணியன் பேசிய ரஜினிகாந்ந்த தொடர்பான பேச்சு அவ்வளவு முக்கியத்துவமும், வீர்யமும் பெற்று அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.
அதிமுக கூட்டணியில் இருந்து பாமகவை வெளியேற்ற ஸ்கெட்ச்?.. டப்பிங் மட்டும்தான் தமிழருவி மணியன்??
அரசியல் கட்சி
"ரஜினிகாந்த் உடன் இணைய நிறைய கட்சிகள் காத்திருக்கின்றன.. குறிப்பாக பாமக இணைய வாய்ப்புள்ளது.. அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் 2 பேர் ரஜினி கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.. ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின் கட்சி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்துவார்... செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்" என்றார்.
திடீர் பல்டி
ஒரு அரசியல்கட்சிக்கு தேவையான அத்தனை பிளான்களையும் பக்காவாக ரெடி பண்ணி போன வாரம் பேசினார் தமிழருவி மணியன்.. ஆனால் இதன் காரம் சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. மறுநாளே "ரஜினிகாந்த் என்ன செய்வார் என சொல்லும் உரிமை எனக்கு இல்லை.. எனக்கான வரையறை எது? எனக்கான வரம்பு எது? என அறிந்தே உள்ளேன்.. கட்சி தொடங்குவது, மாநாடு அறிவிப்பு என அனைத்தையும் ரஜினியே முடிவு செய்து அறிவிப்பார்" என்றார். இதற்கு பிறகு இந்த பேச்சு சற்று ஓய்ந்தது.. தமிழருவி மணியன் பேச்சுக்கெல்லாம் பதில் தரக்கூடாதென்று நினைத்தேன், ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் என்று டாக்டர் ராமதாஸ் ஒரே போடாக போட்டார்!
திருப்பூர் கூட்டம்
ஆனால், தமிழருவி மணியன் தனது நண்பர் ரஜினிகாந்தை போலவே திரும்பவும் தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளார்.. மறுபடியும் ரஜினி அரசியல் கட்சி குறித்து பேசியுள்ளார்... திருப்பூரில் ஒரு நூல் அறிமுக விழாவில், தமிழருவி மணியன் பேசியதாவது: "ஆட்சி நாற்காலியில் அமர வேண்டியவர் துறவி போல் இருக்க வேண்டும்... பொது சொத்தில் கை வைக்காதவராக இருக்க வேண்டும்... அதற்கு, ரஜினி, முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை. ஸ்டாலின், அரசியல் நாடகம் நடத்துகிறார்.
ஊழல் கட்சி
ஏன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தபோது, மத்தியில் ஆட்சி செய்தபோது கோர்ட்டில் வழக்கு மொழியாக தமிழ் வர வேண்டும் என்றோ, இலங்கை தமிழருக்கு குடியுரிமை வர வேண்டும் என்றோ போராடி இருக்கலாமே? திராவிட கட்சிகள் ஆளாமல் இருந்தால், இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும்... ஊழல் ஊறிபோயிருந்தும் தமிழகம் வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம், தமிழனின் உழைப்பு.
தனித்து போட்டி
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், 30 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு சாப விமோசனம் கிடையாது. ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் சென்று விட வேண்டும் என திமுக வினர் கவலைப்படுகின்றனர். ரஜினி யாருடன் கூட்டணி வைக்க மாட்டார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசிக்கிறார். ஆன்மிக அரசியலே அவரது திட்டம்" என்றார்.
ஏன் பேசினார்?
இந்த பேச்சில் சில விஷயம் நமக்கு புரிகிறது.. சில விஷயம் பிடிபடவில்லை.. தனக்கென்று ஒரு வரைமுறை, எல்லை உண்டு, வரைமுறை என்று தமிழருவி மணியன் அன்று சொல்லி இருந்தார்.. இப்போது அந்த எல்லை, வரைமுறை தளர்த்தப்பட்டுள்ளதா? "ரஜினிகாந்த் என்ன செய்வார் என சொல்லும் உரிமை தனக்கு இல்லை என்று சொல்லி விட்டு திரும்பவும் ஏன் தமிழருவி மணியன் இதை பற்றியே பேச்சு எடுத்துள்ளார் என்பன தெரியவில்லை.
குழப்பமா இருக்கு
ஒட்டுமொத்தமாக தமிழருவி மணியனின் பேச்சின் சாராம்சத்தை எடுத்து பார்த்தால், ஒன்று, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், திமுக, அமமுகவுடன் சத்தியமாக கூட்டணி கிடையாது. ஆனால் அதிமுகவில் இருந்து 2 பேர் வருவார்கள்.. மற்றொன்று தனித்து போட்டியிடுவார்.. அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா என்று தெரியாது! இதைதான் இப்போதைக்கு தமிழருவி மணியன் பேச்சில் இருந்து குத்துமதிப்பாக எடுத்து கொள்ள வேண்டி உள்ளது... ஒரே குழப்பமாதாம்ப்பா இருக்கு இந்த மேட்டர்!