கொரோனாவை தடுக்க குடை, எலியின் பாசம், நடமாடும் திருமண மகால்... 2020-ல் திருப்பூர் டாப் நிகழ்வுகள்!
திருப்பூர்: திருப்பூர் சற்றே வித்தியாசமான நிகழ்வுகளை 2020-ல் எதிர்கொண்டது. வேலைக்கு சேர்ந்தார் குவார்ட்டர் தருவோம் போஸ்டர் அடித்த இந்த திருப்பூரில்தான், டாஸ்மாக் மதுபான கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க கட்டாயம் குடைபிடிக்க வேண்டும் என விதியும் அமலாகி இருந்தது.
Recommended Video
மழையில் சிக்கிய எலிகுஞ்சுகளை பாசத்துடன் எலி ஒன்று பாதுகாத்த வீடியோ பேசுபொருளானது. 101 வயது அண்ணன் இறந்த செய்தி கேட்டு 98 வயது தங்கையும் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
2020-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது:
1) உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக திருப்பூர் மாவட்ட கவுன்சிலையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலை திமுகவும் கைப்பற்றின. இம்மாவட்டத்தில் மொத்தம் மாவட்ட கவுன்சிலர் இடங்கள் 17. அதிமுக அணி 13 இடங்களைக் கைப்பற்றியது. திமுக அணியில் திமுக 3; காங்கிரஸ் 1 என மொத்தம் 4 கவுன்சிலர்களை பெற்றது. திருப்பூரில் மொத்தம் 170 ஊராட்சி கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுக அணி, அதிமுக 57; பாஜக-3; தேமுதிக 4 என மொத்தம் 64 இடங்களை பெற்றது. திமுக அணியில் திமுக 75; காங்கிரஸ்- 9; மதிமுக-1 சிபிஐ-2; சிபிஎம்-1 என மொத்தம் 88 இடங்களில் வென்றது.
2) திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தால் குவாட்டர் மற்றும் டீ காசுகள் வழங்கப்படும் என உரிமையாளர் ஒருவர் சுவரொட்டி விளம்பரம் செய்தது பரபரப்பை கிளப்பியது. சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் பேசுபொருளானது.
3) திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை கண்டிக்கும் விதமாக நடு சாலையிலேயே குளித்து நூதன முறையில் சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் வைரலானது.
4) திருப்பூர் அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய நெஞ்சை பதற வைத்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5) கொரோனா பரவல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில் திருப்பூரில் இருந்து 3,000க்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்காக பெரும் போராட்டத்தையும் வடமாநில தொழிலாளர்கள் நடத்தினர்.
6) திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை ஆட்சியர் மேற்கொண்டிருந்தார்.
7) திருப்பூரில் எலிவளைக்குள் கனமழை புகுந்தது. அப்போது தாய் எலி, தமது குஞ்சுகளை அந்த வளையில் இருந்து பாதுகாப்பாக தூக்கி மழை இல்லாத இடத்துக்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.
8) கொரோனா பரவல் மனிதர்களை எப்படி எல்லாம் சிந்திக்க வைத்தது என்பதை பாருங்கள். கொரோனா பரவலைத் தடுக்க நடமாடும் திருமண மகால் வாகனத்தை உருவாக்கினார் உடுமலைப்பேட்டை சிற்பக் கலைஞர் ஹக்கீம். இதுதான் உலகின் முதல் நடமாடும் திருமண மண்டபம் என பெயரும் பெற்றது.
9) லாக்டவுன் காலத்தில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கிய நிலைகள் பறவைகளும் வனவிலங்குகளும் மிகவும் சுதந்திரமாக வலம் வந்த வீடியோ முக்கிய செய்தியாக இடம்பிடித்திருந்தது.
10) தாராபுரத்தை அடுத்த குண்டடம் தும்பலப்பட்டியைச் சேர்ந்தவர் 101 வயது விவசாயி காளியப்பன் வயது முதுமையால் காலமானார். அவரது மரண செய்தி கேட்ட 98 வயது சகோதரி நல்லாத்தாளும் அடுத்த சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தார். பாசமலர்களின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.