செய்தியாளர் சந்தோஷ் வேலாயுதம் விபத்தில் அகால மரணம்: செய்தியாளர்கள் இரங்கல்
கோவை சன் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளரும், திருப்பூர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளருமான சந்தோஷ் வேலாயுதம் விபத்தில் அகால மரணமடைந்தார்.
திருப்பூர்: சன் தொலைக்காட்சியில் பணியாற்றிய செய்தியாளர் சந்தோஷ் வேலாயுதம் வயது 37, சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கோவை மாவட்ட செய்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் எஸ்வி காலணியில் வசித்து வந்தவர் சந்தோஷ் வேலாயுதம். இவர் சனிக்கிழமையன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது திருமுருகன் பூண்டி அருகே நிலைதடுமாறி கிழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சந்தோஷின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. ஞாயிறன்று பிற்பகலில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சந்தோஷ் வேலாயுதம் மறைவுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட இரங்கல் செய்தியில்
கோவை சன் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளரும், திருப்பூர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளருமான சந்தோஷ் வேலாயுதம் விபத்தில் சிக்கி காலமானார் என்ற செய்தி கோவை பத்திரிகையாளர்கள் இடையே சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் விபத்தில் சிக்கிய அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
எல்லோரிடமும் இயல்பாக அன்போடு பழகும் அவர் செயல்பாடுகள், அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே மட்டுமல்ல நண்பர்கள் மற்றும் மக்களிடையே, அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா சிகிச்சை மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை - டாக்டர் சரவணன் எம்எல்ஏ
2018-19 ஆம் ஆண்டுகளில் நமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய போது அவர் அளித்த பங்களிப்பும், மன்றம் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அவர் காட்டிய ஈடுபாடும் நினைவு கூறத்தக்கது. குறிப்பாக மன்றம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட பேரிடர் கால பணிகளில் அவர் உற்சாகத்துடன் பங்கேற்றது அனைவரின் நினைவிலும் எப்போதும் நிலைத்திருக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கோவை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த தருணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும், உடன் துணை நின்ற தோழர்களையும் நினைவு கூற மன்றம் கடமைப்பட்டுள்ளது. உடன், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டும் என, சக பத்திரிகை நண்பர்களையும் கோவை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.
சந்தோஷின் மரணத்திற்கு அவரது நண்பர்களும், சக செய்தியாளர்களும் அவரது முகநூல் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். குடும்பத்தின் ஒரே ஆதரவான அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.