இப்படி ஒரு பாசமா.. நினைத்து பார்க்கவே முடியவில்லை.. கண் கலங்க வைத்த திருப்பூர் அண்ணன்-தங்கை
திருப்பூர்: திருப்பூர் அருகே, 101 வயது அண்ணன் இறந்த அதிர்ச்சியில் 98 வயது தங்கையும் இறந்த சம்பவம் பாசமலர் படத்தை மிஞ்சிவிட்டது.
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த தும்பலப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (101). பேரன், பேத்திகள் எடுத்து விட்ட காளியப்பன் தனது மகனின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இவருடைய தங்கை நல்லாத்தாள் (98). இவருக்கும் அதே ஊரில் திருமணமாகி பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வந்தார். அண்ணன்-தங்கை இருவரும் ஒருவருக்கொருவர் அதிக பாசம் வைத்திருந்தனர்.
பிரதமர் மோடியின் பிறந்தநாள்.. 70 அடி நீள கேக் வெடி கொண்டாட்டம்
முன்பே சொன்ன தங்கை
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்குமுன் காளியப்பன் மற்றும் நல்லாத்தாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது நல்லாத்தாள், "என் அண்ணனும் நானும் ஒரே நாளில் இறந்து விடுவோம். அப்போது எங்களது உடலை அருகருகே புதைத்துவிடுங்கள்" என கூறியுள்ளார்.
அண்ணனை தொடர்ந்து தங்கை மரணம்
அதன்பின்னர் குணமடைந்து வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மீண்டும் காளியப்பன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து நல்லாத்தாளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு காளியப்பன் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. அவருடைய உடலை அங்குள்ள இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். காளியப்பன் இறந்துபோன தகவல் படுத்த படுக்கையாக இருந்த அவருடைய தங்கை நல்லாத்தாளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நல்லாத்தாள் அதிர்ச்சியில் நேற்று மதியம் 12 மணிக்கு இறந்தார். இதையடுத்து நல்லாத்தாள் விரும்பியபடியே அவரது அண்ணன் காளியப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே நல்லாத்தாளின் உடலும் புதைக்கப்பட்டது.
இதுவல்லவோ பாசம்
பணமே பிரதானம் என்றாகி விட்ட இன்றைய நவீன உலகில் பாசம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எள்ளளவு இடம் கூட விட்டு தரமாட்டேன் என்று, ரத்த உறவுகளே கோர்ட்டு இழுக்கும் காலமல்லவா இது. ஆனால், காளியப்பன் மற்றும் அவர் தங்கை நல்லாத்தாள், இத்தனை வயதுக்கு பிறகும் மிகுந்த பாசம் கொண்டு வாழ்ந்து வந்ததை அறிவோர் கண்களில் அவர்களை அறியாமல் நீர்த்துளி பெருக்கெடுத்துவிடும்.
பாச மலர்கள்
பாசமலர், என்ற சிவாஜி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடித்த புகழ்பெற்ற திரைப்படத்தில், அண்ணன்-தங்கை ஒரே நேரத்தில் இறந்து போவது போல கிளைமேக்ஸ் காட்சி இருக்கும். பார்ப்போர் அனைவரின் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்து விடும் காட்சி அது. அதையும் மிஞ்சிய அளவுக்கு அண்ணன்-தங்கை பாசம் நிஜத்திலும் உள்ளது என்பதை ஒரு அண்ணன்-தங்கை தங்களது சாவில் நிரூபித்து விட்டனர். மறைந்தும் வாழ்கிறது அவர்கள் தொப்புள் கொடி உறவு.