“சொன்ன நேரத்தில் துணியை தைத்து தர முடியவில்லையே”..தீபாவளியன்று பெண் டெய்லர் தற்கொலை!
தீபாவளியன்று திருப்பூரில் பெண் டெய்லர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: தீபாவளிக்கு வாடிக்கையாளர்களுக்கு சொன்னபடி துணியைத் தைத்து தர இயலவில்லையே என்ற சோகத்தில் திருப்பூரில் பெண் டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பாப்பண்ணா நகரைச் சேர்ந்தவர் பத்மினி (41). கணவரைப் பிரிந்த இவர் தனது தாய், மகள் மற்றும் மகனுடன் தங்கியிருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண்கள் தையலகம் நடத்தி வரும் இவருக்கு, அப்பகுதி பெண்களிடையே நன்றாக உடையைத் தைத்து தருபவர் என்ற பெயர் உள்ளது. இதனால், நாளுக்கு நாள் இவரது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது.
இந்நிலையில், தீபாவளியை ஒட்டி இவரிடம் ஏராளமானோர் உடை தைக்க துணி தந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அதிக துணிகள் வரவே தன்னால் தைத்து தரமுடியாது என பத்மினி மறுத்துள்ளார். ஆனாலும் விடாமல் அவர் தான் தைத்துத் தர வேண்டும் என வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர்.
இதனால் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக உடைகள் தைத்து தந்துள்ளார் பத்மினி. ஆனாலும் சொன்னபடி அனைவரது துணிகளையும் அவரால் தைத்து முடிக்க இயலவில்லை. இதனால் மனமுடைந்த அவர், 5 ஆண்டுகளாக காப்பாற்றி வந்த நற்பெயர் கெட்டு விட்டதே என வருத்தப்பட்டுள்ளார்.
அதோடு தன்னை நம்பி தீபாவளி புதுத்துணி தைக்க கொடுத்தவர்களை ஏமாற்றி விட்டோமே என்ற மன உளைச்சலிலும் அவர் இருந்துள்ளார். இதனால் சோகத்தில் இருந்த அவர், சாணிபவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் பத்மினியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்மினியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திறமையான டெய்லர் எனப் பெயரெடுத்த பத்மினியின் இந்த திடீர் தற்கொலையால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.