கீழடியை விட கொடுமணலில் அதிகமான தொல் தமிழ் எழுத்துகள்.. கொங்கு தொன்மை அகழாய்வுக்கு வலியுறுத்தல்
திருப்பூர்: கீழடியை விட கொடுமணலில் அதிகமான தொல் தமிழ் எழுத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளன; கொங்கு பகுதியின் தொன்மை குறித்து அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழறிஞர்கள் வலியுறுத்தினர்.
திருப்பூர் பார்க்ஸ் கல்லூரியில் ஊரும் வரலாறும் என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கடலாய்வு தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு, தொல்லியல் துறையின் அலுவலர் ஸ்ரீதரன், கல்வெட்டியல் ஆய்வாளர் ராசு, சரஸ்வதி மஹால் தமிழ்ப் பண்டிதர் மணிமாறன், கோவை பூ சா கோ கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் ச. ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவில் ஒரே வருடத்தில் 324% புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு.. அதிர்ச்சி தகவல்.. தடுப்பது எப்படி?
ஏராளமான கல்திட்டைகள்
இதில் கோவை பேராசிரியர் ச. ரவி பேசியதாவது: கொங்கு நாட்டு வளம் மூவேந்தர்களால் அடிக்கடி கொள்ளையடிக்கப்பட்டதோடு, வீரமரணமடைந்தவர்களின் கல்லறைகள் தான் இன்று நடுகற்களாகவும் கல்லறைகளாகவும் கல் வட்டங்களாகவும் கல்திட்டைகளாகவும் அதிகமாக காணப்படுகின்றன.
கொடுமண் தொல் தமிழ் எழுத்துகள்
மூவேந்தர்களின் ஆதிக்கப் பிடியில் இருந்தாலும் கொங்குப் பண்பாடும் நாகரிகமும் இன்றளவும் தனித்துவமிக்கதாகக் காக்கப்பட்டு வருகின்றன. அகழ்வாய்வுகளில் அதிகமான தொல்தமிழ்எழுத்துகளைப் பெற்றது கொங்கு நாட்டு கொடுமணலே தவிர மதுரை கீழடி அல்ல. இவ்வாறு ச. ரவி பேசினார்.
நொய்யல் நதி நாகரிகம்
கல்வெட்டியல் ஆய்வாளர் ராசு பேசுகையில், நொய்யல் நதி கரையோர ஊர்கள் மிகவும் பழமையானவை. கொடுமணல், கந்தங்கண்ணி, சூலூர் ஆகியவற்றில் இன்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தொன்மை சின்னங்கள் இருக்கின்றன.
ரோமானிய காசுகள்
திருப்பூர் அருகே ரோமானிய காசுகள் கிடைத்திருக்கின்றன. ரோமானியர்களின் பொம்மைகள், ஓடுகள் கிடைத்திருக்கின்றன. இது நொய்யல் நதிக்கும் ரோமானியர்களுக்கான தொடர்பை வெளிப்படுத்துகிறது.
அகழாய்வு அவசியம்
கீழடி தாய் மடி என்று சொல்லும் போது கொடுமணலில் ஆயிரக்கணக்கான வண்ணம் தீட்டிய மணிக்கற்கள் கிடைத்துள்ளன. ஆகையால் கொங்கு பகுதியின் தொன்மையை விளக்க அகழாய்வுகளும் அவசியம் என்றார்.