திருப்பூர் அரசு மருத்துவமனை...மின்தடையால்...3வது நபர் இறந்ததாக கலெக்டரிடம் புகார் மனு!!
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் மேலும் ஒரு பெண் இறந்ததாக அந்த மாவட்டக் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அப்போது, இந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் முருகானந்தபுரத்தை சேர்ந்த 67 வயது பெண், வெங்கடேசபுரத்தை சேர்ந்த 59 வயது ஆண் இருவரும் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இவர்களது உயிரிழப்புக்கு மின்தடைதான் காரணம் என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் பூலுவபட்டி மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் மோகன்குமார். மாவட்டக் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்து இருந்தார்.
அந்த மனுவில், ''எனது பெரியம்மா அனுராதா, வயது 45. தள்ளுவண்டியில் பலகாரம் போட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்தார். பெரியப்பா தண்டபாணி 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குடும்பத்தை எனது பெரியம்மாவே கவனித்து வந்தார். மருத்துவமனையில் கடந்த 16ஆம் தேதி ஆஸ்துமா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அங்கிருந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி பெரியம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நில அபகரிப்பு வழக்கு: சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!
இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி காலை மின்சாரம் தடை ஏற்பட்டதால், செயற்கை சுவாசக்கருவி செயல்படவில்லை. இதனால் அவர் தொடர்ந்து மூச்சுத்திணறலை சந்தித்து வந்தார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தபோதும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்தார். மேலும், சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் அளித்து இருக்கும் விளக்கத்தில், ''ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் போதிய அளவில் உள்ளன. எதற்காக இந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றனர் என்று தெரியவில்லை. உயிரிழந்த அனுராதா எந்த அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணியின்போது, மின் வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குச் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏற்பட்ட கோளாறால், அடுத்தடுத்து இருவர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மூன்றாவதாக ஒருவரும் உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.