எங்க குழந்தையை காப்பாத்துங்க.. எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் குமுறல்
2 வயது குழந்தையை காப்பாற்றும்படி கலெக்டரிடம் பெற்றோர் புகார் அளித்தனர்.
Recommended Video
திருப்பூர்: "எங்க குழந்தையை காப்பாத்தி கொடுத்தாலே போதும்" என்று எச்ஐவி பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 2 வயது பெண் குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட கலெக்டரிம் மனு அளித்து இருக்கிறார்கள்.
திருப்பூரை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன்-புஷ்பா. இவர்களின் 2 வயது பெண் குழந்தைக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் 2 தினங்களுக்கு முன்பு பகீர் புகார் அளித்தனர்.
இது சம்பந்தமாக விஸ்வநாதன் கூறும்போது, "கடந்த 11-02-2018 அன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருதய நோய் பாதிக்கப்பட்ட எங்கள் குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. ரத்தம் ஏற்றும்போது நான் கூடவே இருந்தேன். தவிர வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காகவும் அழைத்துச் செல்லவும் இல்லை.
சிபிசிஐடி விசாரணை
எனக்கும், என் மனைவிக்கும் எச்ஐவி பாதிப்பு இல்லை. எங்கள் இருவருக்கும் எச்ஐவி பாதிப்பு இல்லாத போது என் குழந்தைக்கு மட்டும் எப்படி இந்த பாதிப்பு ஏற்பட்டது? இது சம்பந்தமான சிபிசிஐடி விசாரணை தேவை" என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இது சம்பந்தமான குற்றச்சாட்டை ஆஸ்பத்திரி நிர்வாகம் அப்போதே மறுத்திருந்தது.
விசாரணை
எனினும் ஊடகங்களில் இந்த செய்தி வெளியானதை அடுத்து விசாரணை அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழக அரசு சுகாதாரத்துறை அறிவுறித்தியிருந்தது. இதையடுத்து, மருத்துவமனையின் டீன் அசோகனும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் விரைவில் அறிக்கை அளிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்,
காப்பாற்றி தர வேண்டும்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தன் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கக்கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்துள்ளார். "குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி கொடுத்தாலே எங்களுக்கு போதும்" என பெற்றோர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் வரவில்லை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர், "ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட எங்கள் 2 வயது பெண் குழந்தைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை தரவில்லை. காலை ஒருமுறை மட்டுமே டாக்டர் வந்து குழந்தையை பார்த்து செல்கிறார். குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என ஆஸ்பத்திரி டீன் எங்களை கேட்டு கொண்டார்" என்று தெரிவித்தனர்.