அதிகாலையில் பரிகார பூஜை.. சக்திவேல் செய்த பயங்கரம்.. மாமியார் வீட்டில் சிக்கினார்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் பரிகார பூஜையின்போது, பெண்ணை நகை பணத்துக்காக கொலை செய்து தப்பிய ஆட்டோ டிரைவரை, தனிப்படை போலீசார் மதுரையில் உள்ள அவரது மாமியார் வீட்டில் கைது செய்தனர்.
மகனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்பதற்காக பரிகார பூஜை நடத்திய முதியவர்களை பணம், நகைக்கு ஆசைப்பட்டு கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், அகரப்பாளையம் புதுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 60; வெள்ளகோவிலில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி வயது 55.
ஏன் பூஜை
இவர்களது மகனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. மகனுக்கு குழந்தை பேறு வேண்டி, ஆட்டோ டிரைவர் சக்திவேல் வயது 35, என்பவர் மூலம், சில நாட்களுக்கு முன், ஆறுமுகம் - ஈஸ்வரி தம்பதி, பர்னிச்சர் கடையில், அதிகாலையில் பரிகார பூஜை செய்தார்கள்,
தப்பி ஓட்டம்
அப்போது, தம்பதியை சுத்தியால் தாக்கி, 5 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாயுடன் சக்திவேல் தப்பினார். இதில், ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார், நேற்று முன்தினம் இரவு, மதுரையில் சக்திவேலை கைது செய்தனர்.
ஏமாற்றிய சக்திவேல்
போலீசார் இது குறித்து கூறுகையில், :ஆறுமுகத்தின் கடையில் விற்பனையாகும் பொருட்களை, ஆட்டோவில் சக்திவேல் எடுத்து செல்வது வழக்கம். சக்திவேலுக்கு, 1 லட்சம் ரூபாய் கடன் இருந்துள்ளது. பரிகார பூஜை மூலம் பணம் கிடைக்கும் என, ஆறுமுகத்திடம் சொல்லி பூஜை நடத்தியுள்ளார்.
கைது செய்த போலீஸ்
அப்போது பூஜையின் போது திடீரென மனம் மாறி, நகை, பணத்துக்காக ஆறுமுகம் மற்றும் ஈஸ்வரியை கத்தியால் தாக்கிவிட்டு பணம் நகையுடன் தப்பியுள்ளார். இதில் ஈஸ்வரி உயிரிழந்தார். ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரையில் உள்ள மாமியார் வீட்டில், மனைவியுடன் தங்கியிருந்த சக்திவேலை கைது செய்தோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.