குடும்பத்துக்கு 10 லிட்டர் பிராந்தி தர்றேன்.. சந்தோஷமா இருங்க.. ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு!
வாக்காளர்களுக்கு பிராந்தி வழங்கப்படும் என சுயேச்சை வேட்பாளர் அறிவித்துள்ளார்.
Recommended Video
திருப்பூர்: அட்றா.. அட்றா.. ஒரு குடும்பத்துக்கு 10 லிட்டர் பிராந்தி ஃப்ரீயா.. என ஒரு வேட்பாளர் அறிவிப்பை பார்த்து வாய் பிளக்கிறார்கள் குடிமகன்கள்! அதைவிட முக்கியமானது செய்தியாளர்களே தலைசுத்தி போய்விட்டார்கள் இந்த வேட்பாளர் பேசிய பேச்சை கேட்டு!
வழக்கம்போலவே இந்த முறையும் தேர்தல் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேச்சைகளும் களம் இறங்கி விட்டனர்.
சீக்கிரமாக பேமஸ் ஆக வேண்டும், அதுவும் உழைக்காமல் மேலே வந்துவிட வேண்டும், எப்படியாவது ஜெயிக்க வேண்டும், ஜெயிப்பதற்காக "போட்டதை" திரும்பவும் எடுக்க வேண்டும்... என்பதற்காக ஆளாளுக்கு தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஒரு வீடு விட்ராதே, சரக்கெல்லாம் சரியா போட்ருங்கப்பா.. பெரியகுளத்தில் கலகலப்பு!
சுயேச்சை
அந்த வகையில் முக்கியமானவர்தான் ஷேக் தாவூத். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர். டெய்லராக இருக்கிறார். திருப்பூர் தொகுதியில் வேட்பாளராக சுயேச்சையாக களம் இறங்குகிறார். அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் இவர் சொன்னதாவது:
சுத்தமான பிராந்தி
"நான் 15 தேர்தல் வாக்குறுதிகள் வைத்துள்ளேன். முதலில் எனது தொகுதியில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.25 ஆயிரம் உதவி தொகையை அரசிடமிருந்து பெற்றுத்தருவேன். பின்னர் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு மாதம் 10 லிட்டர் சுத்தமானதாக பிராந்தியை (சுத்தம்) பெற்றுத்தருவேன். அதுவும் பாண்டிச்சேரியிலிருந்து வாங்கித் தருவேன். அனைத்து மத பெண்களுக்கும் திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் பெற்றுத் தருவேன்" என்று சொன்னார்.
மதுவிலக்கு
தொடர்ந்து பேசிக் கொண்டே வந்த வேட்பாளர் ஷேக், "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கூடாது என டெல்லியில் தொடர்ந்து போராடுவேன்" என்று சொன்னாரே பார்க்கலாம்.. செய்தியாளர்கள் இதைக்கேட்டு ஆடிப்போய் விட்டார்கள்.
கிறுகிறுத்து போயினர்
உண்மையிலேயே வேட்பாளர் இதை நிதானத்தோடுதான் சொன்னாரா, அல்லது பாண்டிச்சேரி பக்கம் போய்ட்டு வந்து சொன்னாரா என தெரியவில்லை. ஆனால் "என்னாது.. ஒரு வீட்டுக்கு 10 லிட்டர் பிராந்தியா என குடிமகன்கள் போதையிலும், என்னாது, மதுவிலக்கு போராட்டமா என குடிக்காமலேயே பொதுமக்களும் கிறுகிறுத்து போய் கிடக்கிறார்கள் ஷேக்கின் இந்த அறிவிப்பினால்!