நல்லவர்களாக இருந்தால் போதாது, வல்லவர்களாகவும் இருக்கனும்.. தமாகவினருக்கு ஜி.கே.வாசன் அட்வைஸ்
திருப்பூர்: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை ஒரு கூட்டுக்குடும்பத்தைப் போல நடத்தி வருவதாக அதன் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார்
திருப்பூரில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய வாசன் நாம் சார்ந்திருக்கும் கூட்டணியான அதிமுக கூட்டணியைத்தான் ஆட்சியில் தொடர மக்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
தற்போது அதிமுக ஆட்சியில் தொடர்வதற்கு தமாகா-வின் பங்கு பெரும்பங்கு, விவசாயிகளின் என்னத்தை பிரதிபலிப்பவர்களாக மத்திய, மாநில அரசுகள் இருக்க வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வர எண்ணினால் தமாகா அதை தீவிரமாக எதிர்க்கும்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். உயர் மின்னழுத்த பாதையை விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் பூமிக்கடியில் கொண்டு செல்லவேண்டும் என்று விவசாயிகளுக்கு குரல் கொடுத்தவர், அடுத்ததாக அரசியலை கையில் எடுத்தார்.
தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெரில்தான் இருக்கிறது. தமாகா நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் நடைபோடுகிறது. தமாகாவி-னர் என்றால் நல்லவர்கள் என்ற பெயர் இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதாது.
வல்லவர்கள் என்ற பெயரையும் பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். தமாகாவை ஒரு கூட்டுக் குடும்பம் போல நடத்திவருகிறேன். சுயலாபம் கருதி இதுவரை நான் எந்த முடிவையும் எடுத்தது கிடையாது. சுயமரியாதையை யாரிடத்திலும் விலைபேசியது கிடையாது.
உழைப்புக்கு மக்கள் அங்கீகாரம் தரும் காலம் விரைவில் வரும் என்று பேசியவர் திமுக-வையும், காங்கிரசையும் தாக்கவும் தவறவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்கள். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
பிரதமர் கனவோடு இருந்த முன்னாள் தலைவரின் வாரிசுகள் எல்லாம் இன்று விலாசம் தெரியாத அளவுக்குச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று ராகுலை கடுமையாக விமர்சித்தர் வாசன். 134 வருடப் பாரம்பரிய தேசிய கட்சிக்கு மக்கள் வெறும் 52 இடங்களை மட்டுமே கொடுத்துள்ளார்கள் என்றும் பேசினார்.