அம்மா விஷம் சாப்பிட்டுட்டாங்க.. தாத்தா தூக்குல தொங்கிட்டாரு.. 3 பேர் உசுரு போச்சு.. திருப்பூர் ஷாக்!
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
திருப்பூர்: "அம்மா விஷம் சாப்பிட்டாங்க தாத்தா தூக்குல தொங்கிட்டாரு.. நான் கையை அறுத்துக்கிட்டேன்" என்று 16 வயது சிறுவன் சொந்தக்கார்களுக்கு அளித்த தகவல் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா - அம்மா - பேரன் என 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது!
திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு ஜெய்நகரில் வசித்து வந்தவர் அபர்ணா.. 42 வயதாகிறது.. ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது ஒரே மகன் ஜித்தன்.. 17 வயதாகிறது.. தந்தை வெள்ளியங்கிரி, மகன் ஜித்தனுடன் அபர்ணா ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்... வெள்ளியங்கிரிக்கு 71 வயதாகிறது.
சடலம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அபர்ணாவின் அம்மா உடல்நல கோளாறு காரணமாக இறந்துவிட்டார்.. இந்த சமயத்தில், ஈமச்சடங்குக்குகூட கையில் பணம் இல்லாமல் அபர்ணா தவித்திருக்கிறார்.. அக்கம்பக்கத்தினர்தான் அபர்ணாவின் நிலையை பார்த்து அம்மாவின் சடலத்தை அடக்கம் செய்ய பணம் தந்து உதவி செய்திருக்கிறார்கள். பணத்தை முதலில் வேண்டாம் என்று மறுத்துள்ள அபர்ணா, பிறகு வேறு வழியில்லாமல் வாங்கி இறுதிசடங்கினை செய்துள்ளார்.
விஷம்
இந்த சம்பவம் நடந்ததில் இருந்தே 3 பேரும் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று சாயங்காலம் ஜித்தீன் தன் சொந்தக்காரர்களுக்கு போன் செய்தார்.. அப்போது அம்மா விஷம் சாப்பிட்டுட்டாங்க.. தாத்தா தூக்கு போட்டுக் கொண்டார்.. நான் என் கையை அறுத்து கொண்டேன் என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விட்டார்.
ரத்த வெள்ளம்
இதனால் உறவினர்கள் பதறியடித்து கொண்டு வீட்டுக்கு ஓடிவந்தனர்.. அங்கே வீட்டிற்குள் 3 பேருமே ஆளுக்கு ஒரு பக்கமாக சடலமாக விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. உடனடியாக திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்களும் விரைந்து வந்தனர்.. வீட்டிற்குள் நுழையும் முன்பே துர்நாற்றம் வீசியது.. வீடு முழுக்க ரத்த வெள்ளமாக கிடந்தது.. அந்த ரத்தமும் உறைந்த நிலையில் கிடந்தது.
விசாரணை
அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்திருந்ததால், 3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது தாய், தாத்தா ஆகியோரை ஜித்தீன் கொலை செய்து விட்டு தானும் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேருமே உயிரிழந்த சம்பவம் திருப்பூரை பதற வைத்து வருகிறது.