"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்
திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
Recommended Video
திருப்பூர்: "இதுக்குதான் பணம் தந்தியா..ண்ணா" என்ற சாந்தியின் கேள்விக்கு இதுவரை யாராலும் பதில் சொல்லவே முடியவில்லை.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் 70 வயது. இவருக்கு சாந்தி, செல்வி என்று 2 மகள்களும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.
மூத்த மகள் செல்வி கணவனை இழந்தவர். அதனால் அப்பாவுடன்தான் தங்கி உள்ளார். கோபாலகிருஷ்ணனுக்கு 37 வயதாகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இதனால் குடும்பமே சோகத்தில் இருந்தது.
ஒரே டூவீலரில் போன 3 பெண்கள்.. அரசு பஸ் மீது மோதி.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
எதுக்கு பணம்?
இந்நிலையில், நேற்றுமுன்தினம் திடீரென துரைராஜ், செல்வி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சாந்தியின் வீட்டிற்கு சென்றார்கள். ரொம்ப நேரம் பாசமாக பேசிக் கொண்டிருந்தனர். கோபாலகிருஷ்ணன், திடீரென தங்கை சாந்தியின் கையில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்தார். எதுக்குண்ணா பணம் தர்றே என்று சாந்தி காரணம் கேட்டார்.
பத்திரம்
அதற்கு கோபாலகிருஷ்ணன், "உனக்கு ஏதாவது அவசர செலவு வரும்.. அப்போ இந்த பணம் தேவைப்படும்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார். மேலும் கிளம்பும்போது, பத்திரத்தையும் கையில் தந்தார். "இது எதற்கு" என்று சாந்தி கேட்க, "நம்ம வீட்டில் வெச்சா பாதுகாப்பு இல்லை, உன்கிட்டியே இருக்கட்டும்" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினார்.
தற்கொலை
நேற்றுகாலை ரொம்ப நேரமாகியும் துரைராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு போய் பார்த்துள்ளனர். அப்போது, அங்கு துரைராஜ், செல்வி, கோபாலகிருஷ்ணன் 3 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். செல்விக்கு லேசான உயிர் இருந்து. துரைராஜ், கோபாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே உயிர் பிரிந்திருந்தது. செல்வியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.
இறுதிசடங்கு
இந்த விஷயம் சாந்திக்கு தெரியப்படுத்தப்பட்டது. பதறியடித்து கொண்டு ஓடிவந்த சாந்தி அப்பா, அண்ணன், அக்கா 3 பேரின் சடலங்களையும் பார்த்து கதறினார். தங்களுடைய மரணம்கூட யாருக்கும் சுமையாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்து 3 பேருமே இறுதி செலவுக்காக பணத்தை சாந்தியிடம் தந்துவிட்டு வந்துள்ளது அப்போதுதான் புரிந்தது.
சாந்தியின் கதறல்
கோபாலகிருஷ்ணனிடம், "இதுக்குதான் பணம் தந்தியா அண்ணா" என்று கேட்டு கேட்டு சாந்தி அழுதது எல்லாரையும் கண்கலங்க செய்தது. இறுதி சடங்குக்கு தேவையான தொகையை தந்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்லடம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.