கொரோனா இல்லாத மாவட்டம் ஆனது திருப்பூர்.. வைரஸ் தொற்றில் இருந்து மீண்டது எப்படி?
திருப்பூர்: தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 3வது மாவட்டமாக ஆனது திருப்பூர் மாவட்டம். 114 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஆகி உள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் மாநகரம் திருப்பூர். இங்கு சுமார் 10 லட்சம் மக்களுக்கு அதிகமானோர் வசிக்கிறார்கள்.
பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூர் பல லட்சம் மக்களை வாழ வைத்து வருகிறது. இங்கு நாள்தோறும் வந்து செல்லும் மக்களும் மிக மிக அதிகம்.
இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் இப்போது இந்த அச்சம்தான்.. கோபிந்தா நிலை ஒரு உதாரணம்!
கொத்துக்கொத்தாக பரவல்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தியது தமிழக அரசு. ஆனாலும் சில காரணங்களால் திடீரென கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்தது. ஆனால் அதில் இருந்து முழுமையாக மீண்டு வெளியே வரும் நேரத்தில் கோயம்பேடு உள்ளிட்ட சில காரணங்களால் கொத்துக்கொத்தாக பல மாவட்டங்களுக்கு கொரோனா பரவி வருகிறது.
சமூக இடைவெளி
சென்னை உள்பட வடமாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உக்கிரமாக உள்ளது. தொடர்பு தடமறிதல் முறையில் அனைவரையும் கண்டுபிடிப்பது கூட கடினமான சவாலாக உள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட போதிலும் படிப்படியாக மீண்டு வந்தது. தொடர்பு தடமறிதல் , சமூக இடைவெளியை பின்பற்ற மளிகை பொருட்கள் டோர் டெலிவரி, டாஸ்மாக் கடைகளில் தடுப்புகளுடன் குடை கட்டாயம் என பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது திருப்பூர் மாவட்ட நிர்வாகம்.
114 பேரும் குணமாகினர்
இதன் காரணமாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவது படிப்படியாக குறைந்தது. அதேநேரம் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் படுவேகமாக அதிகரித்து. கோயம்பேடு, டாஸ்மாக் உள்பட எந்த காரணத்தாலும் திருப்பூர் சமீப காலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடைசியாக இருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து இன்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் 114 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவில் இருந்து விடுதலை
இதன் காரணமாக தமிழகத்தின் 3வது கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் ஆனது திருப்பூர் ஏற்கனவே ஈரோடு, சிவகங்கை கொரோனா இல்லாத மாவட்டங்களாக உள்ளன. அந்த வரிசையில் திருப்பூர் மாவட்டமும் இணைந்துள்ளது, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் ஆரம்பத்தில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி முன் உதாரணமாக திகழ்கின்றன.