ஆர்டர் பண்ணுங்க.. மளிகை பொருட்கள் ரெடி.. வரவேற்பை பெற்ற திருப்பூர் கலெக்டரின் ஐடியா
திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்களிடையே சமூக இடைவெளியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த சூழலில் அத்தியாவசியமான மளிகை பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் புது ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அந்த ஐடியா தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று உலகத்தை ஆட்டிபடைத்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை அனைத்துமே ஸ்தம்பித்து போய் கிடக்கின்றன, கொரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் இதை இந்தியாவில் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் ஆகும்.
மக்கள் நெருக்கம் மிகுந்த இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க மக்கள் கட்டாயம் கூட்டமாக கூடுவதை தவிர்த்து ஆக வேண்டும் என்கிற நிலை உள்ளது.
21 நாட்கள் ஊரடங்கு
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பித்தார். தனித்து இருப்பது, சமூகத்திடம் இருந்து விலகி இருப்பதே கொரோனாவை தடுக்கும் என்றும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தற்போது ஊரடங்கு ஆரம்பித்து இரண்டாவது நாளை வெற்றிகரமாக கடந்துள்ளோம்.
தொற்று ஏற்படும் அபாயம்
இந்நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்துகள், பால் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வரும் நிலை உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பித்தும் பலன் இல்லாத நிலை ஏற்படுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக மளிகை கடை, பால் கடை, காய்கறி கடைகளில் அலைமோதுகிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
புது ஐடியா
இந்நிலையில் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஒரு புது யோசனையை வெளியிட்டுள்ளார். அதாவது திருப்பூர் பகுதியில் இயங்கும் மளிகைக்கடைகளின் பெயர்களுடன் அந்தக் கடையின் போன் நம்பரும் வெளியிட்டு ஆர்டர் செய்தால் உங்கள் பொருட்கள் பேக்கிங் செய்து வைக்கப்படும். ரெடியான உடன் நீங்கள் நேரில் சென்று வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
|
மதியமே அமல்
திருப்பூர் மாவட்டத்தின் பிறபகுதிகளான, அவிநாசி, பல்லடம், உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோன்ற வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை காலையில் டுவிட்டரில் மக்கள் வைத்த நிலையில் மதியத்திற்குள்ளாக அனைத்து பகுதிகளிலும் இதேபோன்ற வசதியை உருவாக்கி உள்ளார். இதனால் திருப்பூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த திட்டத்தினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.