சார்.. பாஜக பேரணி நடத்தப் போகுது.. எங்க பிரியாணி அண்டாவுக்கு பந்தோபஸ்து கொடுங்க.. நூதன புகார்!
திருப்பூர்: பாஜக பேரணி நடப்பதால் திருப்பூரில பிரியாணி கடைக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு கேட்டு பிரியாணி சங்கத்தினர் போலீஸ் ஸ்டேன்சன் சென்று மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த போராட்டங்களுக்கு பதிலடியாக பாஜகவினரும் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியும் நடத்தியும், கூட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.
திருப்பூரில் பேரணி
இந்த கூட்டங்களில் அந்தந்த மாநில பாஜக நிர்வாகிகள் பங்கேற்று இந்திய முஸ்லீம்கள் யாருக்குமே பாதிப்பு வராது என்று உறுதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்திலும் சிஏஏ ஆதரவு பேரணிகள், பொதுக்கூட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் திருப்பூரில் நாளை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையம்
இதற்கான முன்னேற்பாடுகளை பாஜக நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். திருப்பூரில் பாஜகவின் சிஏஏ ஆதரவு பேரணி, திருப்பூரின் சிடிசி பகுதியில் ஆரம்பித்து பெரிய கடை வீதி வழியாக நடக்கிறது.இந்நிலையில் திருப்பூரின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரிய கடை வீதி பகுதியில் ஏராளமான பிரியாணி கடைகள் இயங்கி வருகிறது.
பிரியாணி கடைகள்
பாஜகவினர் சிஏஏ ஆதரவு பேரணி அறிவித்துள்ள நிலையில். அந்த பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடைகள் சங்கத்தினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை அளித்துள்ளார்கள்.அவர்கள் அளித்துள்ள மனுவில், " வருகிற பிப்ரவரி 28ம் தேதி (நாளை) திருப்பூரில் பெரிய கடை வீதி வழியாக பாஜகவினர் பேரணி செல்ல உள்ளார்கள். அதனால் எங்களது பிரியாணி கடைக்கும், பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில் திருட்டு
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொல்லப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து திருப்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்த பேரணி நடைபெற உள்ளதால் பிரியாணி கடைக்கும், அண்டாவுக்கும் பாதுகாப்பு கேட்டு கடைக்கார்கள் சங்கத்தினர் இப்போது மனு அளித்துள்ளார்கள்.