''டைமுக்கு வேலை செய்யாத 108 ' .. திருப்பூரில் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்.. பறிபோனது ஒரு உயிர்!
திருப்பூர்: 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் திருப்பூரில் 50 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (50) இவர் திருப்பூர் கோவில்வலையில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வெள்ளைச்சாமி நேற்று மதியம் 1.15 மணி அளவில் காதர்பேட்டில் திருப்பூர் சாலையில் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் இடையே செல்லும் மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகமாக வந்த மினி பஸ் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளைச்சாமி மீது மோதியது. இதில் படுகாயங்களுடன் வெள்ளைச்சாமி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
ராசிபுரத்தில் குழந்தைகளை விற்று, லட்சக்கணக்கில் சம்பாத்தியம்... 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிக்கினார்
வேலை செய்யாத 108
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு அழைக்க முயன்றுள்ளனர். ஆனால் 15 நிமிடங்கள் வரை 108க்கான தொலைப்பேசி எண் வேலை செய்யவில்லை. இதன் பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வெள்ளைச்சாமி கொண்டு செல்லப்பட்டார்.
முதியவர் சாவு
ஆனால் வெள்ளைச்சாமியை கொண்டு சென்று 6 நிமிடங்களுக்கு பிறகே 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்துக்கு வந்துள்ளது. இதனிடையே தாமதமாக தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட வெள்ளைச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாமதாக வந்த 108
முன்னதாக ஆம்புலன்ஸ் சேவை வேலை செய்யாத நிலையில் அங்கிருந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையின் அருகில் உள்ள சந்திராபுரம் காவல் நிலைய செக்போஸ்ட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அதன்பிறகு போலீசார் நேரில் சென்று 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தெரியப்படுத்தி அதன் பின்னரே டிரைவர் 108 வாகனத்தை எடுத்து விரைந்து வந்துள்ளார். அதற்குள் வெள்ளைச்சாமி தனியார் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டுள்ளார், ஆனால் தாமதமாக போனதால் வழியிலேயே உயிரிழந்தார்.
108 சேவை எண்
இதனிடையே 108 ஆம்புல்ன்ஸ் தொலைப்பேசி எண் வேலை செய்தாதது குறித்து விளக்கம் அளித்த மாவட்ட அதிகாரி முத்துகிருஷ்ணன், திருப்பூர் காட்டன் மார்க்கெட், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையங்களில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ்கள் ஏன் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல அதிக நேரம் எடுத்தது என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது. சில நேரங்களில் 108 சேவை எண் பிஸியாக இருக்கும். அந்த சமயத்தில் வேலை செய்யவில்லை என புகார்கள் வருகிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த பிரச்னை சரியாகிவிடும்" என்றார். தாமதமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.