குடையுடன் வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது.., திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 17.05. 2020 வரை முழு ஊரடஙகு உத்தரவிடப்பட்டிருப்பதால் தமிழ்நாடு வாணிபக்கழக மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் மதுபானக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் 07.05.2020 முதல் மதுபானக்கடைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது.
|
ஒரே நேரத்தில் ஐந்து பேர் மட்டுமே
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் 07.05.2020 முதல் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது. மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவளி 6 அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும். மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
7 மணி நேரம் இயங்கும்
மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.
குடை இருந்தால் மது
சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்கும் பொருட்டு மதுபானக்கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வந்து குடைபிடித்து நின்று மதுபானங்கள் பெற்று செல்ல வேண்டும். குடியுடன் வராதவர்களுக்கு மதுபான வகைகள் வழங்கப்படமாட்டாது.
பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
மதுபானக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் தனிநபர் சுத்தம் பேணப்படுவதோடு மதுபானக்கடை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைக்கு உட்பட்டு மதுபானக்கடைகள் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது. மதுபானக்கூடங்கள் திறக்க அனுமதி இல்லை. மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.