ஐயோ இது என்ன.. டாஸ்மாக்கில் சரக்கு வாங்க போகும் குடிமகன்களுக்கு ஹை ஜம்ப் தெரியனுமா? வைரல் வீடியோ
திருப்பூர்: சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில், நாளை காலை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள், டாஸ்மாக் கடை முன்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குடை கொண்டு வந்தால் மட்டுமே மதுபானம் தரப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
குடிப்பதன் மூலமாக இரு நபர்கள் இடையே ஒரு அளவுக்கு இடைவெளி இருக்கும் என்பது இதற்கு காரணம்.
திருப்பூர் மதுக்கடை
இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் மது கடை முன்பாக இருபக்கமும் கம்புகள் கட்டப்பட்டு குடிமகன்களை வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமா.. நாளை அவர்கள் எப்படி வருவார்கள் என்பதை சோதித்து பார்ப்பதாக இன்று ஒத்திகை நடத்தப்பட்டது. குடை பிடித்தபடி ஒருவர் இந்த இடைவெளி வழியாக நடந்து சென்று, ஏதேனும் தடைகள் இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்தார்.
ஹை ஜம்ப் தெரியனும்
இருபக்கமும் மரக் கம்புகள் கட்டப்பட்டது மட்டும் கிடையாது. நடந்து செல்லும் பாதையின் குறுக்கே ஆங்காங்கு கம்புகள் கட்டப்பட்டுள்ளன. குடிமகன்கள் இதை தாண்டி, தாண்டி செல்ல வேண்டும். அதுவும் உயரம் அதிகமாக உள்ளதால், ஹை ஜம்ப் எனப்படும் உயரம் தாண்டும் திறன் கொண்ட நபரால்தான் இங்கு சென்று சரக்கு வாங்க முடியும் என்பது மட்டும் உறுதி.
எவ்வளவு நீளம்
வாட்ஸப்பில் வெளிவந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றிவருகிறது. அதிலும் சுற்றிசுற்றி நீண்ட தூரத்துக்கு கம்புகள் கட்டப்பட்டுள்ளன. குடிமகன்கள் அலை அலையாக வந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் இதற்கு காரணம் போல தெரிகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூட ராக்கெட் ஏவுவதற்கு முன்பாக இத்தனை ஒத்திகை பார்த்து இருக்க மாட்டார்கள், ஆனால் மதுபான கடையில் மது வாங்க செய்ய இத்தனை ஒத்திகை நடைபெறுகிறது என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அச்சம்
மேலும் இவ்வாறு இருபக்கமும் கம்புகள் வைத்துக் கட்டப்பட்டிருக்கும்போது குடிமகன்களின் ஒவ்வொருவரும் அதை தொட்டு செல்வார்கள். அதன் மூலம் பிறருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு இருக்கிறது என்ற ஆதங்கத்தையும் மக்கள் வெளிப்படுத்துகின்றனர். கோயம்பேடு மார்க்கெட் எப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு கிளஸ்டர் போல மாறியதோ, அதேபோல டாஸ்மாக் மதுக்கடைகள் மாறிவிடக் கூடாதே என்ற ஒற்றை வேண்டுதலுடன், மொத்த தமிழகமும் நாளைய விடியலை நோக்கி காத்திருக்கிறது.