ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லையாம்..சொல்கிறார் ஜி.கே.வாசன்..
திருப்பூர்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் த.மா.கா.நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அபோது பேசிய அவர், வரும் தேர்தல்களிலும் அதிமுகவுடன் வைத்திருக்கும் கூட்டணியை தொடர்வோம் எனக் கூறினார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் வாக்குகள் சிதறி ஆட்சிக்கும், கட்சிக்கும் பாதிப்பு வந்துவிடுமோ என திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளே உள்ளூர கவலையில் உள்ள நிலையில், ரஜினியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என ஜி.கே.வாசன் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வெளிநாடு பயணம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்துக்கு வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவர எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், நாகரீகமற்ற கருத்துக்களை அரசியல் கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கோவை-திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பொருளாதார விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சீராக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.