பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றாக தண்ணீர் பந்தல்.. அசத்தும் உடுமலை அஇஅதிமுக!
திருப்பூர்: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றாக தாகம் தீர்க்க நடமாடும் நீர்மோர் பந்தல் திட்டத்தை முதல்வரின் பிரச்சாரத்தில் உடுமலை அதிமுகவினர் நூதனமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என கூறினார்.
திமுக நாட்டுக்கு உழைக்காமல் சொந்த குடும்பத்திற்கு உழைப்பதாக குற்றம்சாட்டிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பொதுவாக இதுபோன்ற அரசியல் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கட்சிக்காரர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். இது அவர்களின் தாகத்தை தணிக்க போதுமானதாக இல்லாமலும் பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் சாலை எங்கும் சிதறி சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படும்.
இதனை தவிர்க்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நடமாடும் நீர் மோர் பந்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் அலுப்பு தெரியாமல் இருக்க பொதுமக்கள் ஆர்வத்தோடு முந்தியடித்துக்கொண்டு நீர் மோர் வாங்கி பருகி சென்றனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து இயற்கை முறையில் தாகம் தணிக்கும் நடமாடும் நீர் மோர் பந்தலை நூதன முறையில் உடுமலை அதிமுகவினர் ஏற்பாடு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.