2 குழந்தைகளை புடவையில் தூக்கிட்டு.. இன்னொரு புடவையில் தானும் தொங்கிய தாய்.. காரணம்.. கணவரின் குடி!
2 குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
திருப்பூர்: 2 குழந்தைகளையும் புடவையில் தூக்கிலிட்டார் பெற்ற தாய்.. பிறகு இன்னொரு புடவையில் தானும் தொங்கிவிட்டார்.. இதற்கெல்லாம் காரணம் கணவனின் பாழாய்போன குடிப்பழக்கம்தான்! இறந்துபோன 2 குழந்தைகளுமே மாற்று திறனாளிகள் என்பதுதான் உச்சக்கட்ட வயிற்றெரிச்சல்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் நால் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கவுரி என்ற மனைவியும், திவ்யதர்சினி என்ற 13 வயது மகளும், பிரனேஷ் என்ற 11 வயது மகனும் உள்ளனர். இதில் 2 குழந்தைகளும் மாற்று திறனாளிகள்.
திவ்யதர்சினிக்கு காது கேட்காது, பேச முடியாது. பிரனேசுக்கும் காது கேட்காது, சரியாக பேசவும், நடக்கவும் முடியாது. இவர்கள் 2 பேரும் கவுண்டம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் படித்து வந்தனர்.
திண்டாட்டம்
சிவக்குமார் கூலி வேலை செய்பவர்.. தினமும் குடிப்பழக்கமும் இருந்துள்ளது. தினம் தினம் இரவு நேரத்தில் சண்டையும் போட்டு வந்துள்ளார். குடும்பம் நடத்த பணமும் தராத நிலையில், கவுரி இவரிடம் சிக்கி திண்டாடி விட்டார். சம்பவத்தன்றும், சிவக்குமார் வேலைக்கும் போகாமல், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது தம்பதிக்குள் திரும்பவும் தகராறு வெடித்தது.
தற்கொலை
இதனால் விரக்தியும், வெறுப்பும், ஆவேசமும் அடைந்த கவுரி தற்கொலை செய்ய முடிவுக்கு வந்தார். பிள்ளைகளை, கணவரை நம்பி விட்டால் பசி, பட்டினியில் விட்டுவிடுவார்.. சரியாக கவனிக்கவும் மாட்டார் என்று கருதிய கவுரி, ஸ்கூலுக்கு சென்று பிள்ளைகளை அழைத்து வந்தார். அவருடைய சேலையில் 2 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொன்றார்.. இன்னொரு சேலையில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அலறி துடித்தார்
சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் வந்த கவுரியின் தாய், மகள், பேரன், பேத்தி என அனைவருமே பிணமாக தொங்கியதை கண்டு அலறி துடித்தார். அக்கம்பக்கத்தினரும் விரைந்து வந்து துடியலூர் போலீசுக்கு தகவல் சொல்லவும், சடலங்கள் மீட்கப்பட்டன.
மாற்று திறனாளி
அந்த நேரம் பார்த்து போதை தெளிந்து சிவக்குமார் வீட்டுக்குள் நுழைந்தார். ஏற்கனவே கொதித்து போய் இருந்த உறவினர்கள் சரமாரி வசை பாடவும், அங்கிருந்து ஓடி பதுங்கி விட்டார். இளம் தாய், 2 மாற்று திறனாளி குழந்தைகளின் சடலங்களை கண்டு அப்பகுதி மக்கள் கண்கலங்கி அழுதனர். இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.