திடீரென போன கரண்ட்.. மூச்சு திணறியே உயிரிழந்த பெண்.. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்த அதிர்ச்சி
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மேலும் ஒரு பெண் பலியாகி உள்ளார்
திருப்பூர்: திருப்பூர் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் கரண்ட் இல்லாததால் மேலும் ஒரு பெண் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் பூலுவப்பட்டி மும்மூர்த்தி நகரை சேர்ந்த தம்பதி தெய்வமணி - அனுராதா.. இவர்களுக்கு மீனாட்சி, கோமதி, வித்யா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அனுராதாவுக்கு 45 வயதாகிறது.. ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்... கடந்த 16ம் தேதி இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.. அதனால், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் திடீரென இறந்துவிட்டார்.. சிகிச்சை பலனளிக்கவில்லை என்று சொல்லப்பட்டுது.
ஆனால், ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லாததாலேயே மூச்சுத்திணறி அனுராதா இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.. இது தொடர்பாக கலெக்டர் ஆபீசிலும் அனுராதாவின் மகள், உறவினர்களுடன் வந்து மனு தந்தார்.
அதில், "ஐசியூவில்செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் 22ம் தேதி காலை கரண்ட் போய்விட்டது.. அதனால் செயற்கை சுவாச கருவி செயல்படவில்லை... இதனால், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாயங்காலம் மாலை 5.30 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது.. அதனால், மின்தடை காரணமாக உயிரிழந்தவர்களில் தன் தாயையும் கருத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.. "கொரோனா வார்டில் கரண்ட் போனது உண்மைதான்.. ஆனாலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தடை ஏற்படவில்லை... ஏற்கனவே உயிரிழந்த 67 வயது பெண்ணிற்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இருந்தது... அதேபோல, 59 வயது ஆணுக்கும் ரத்தக் கொதிப்பு, நுரையீரல் பாதிப்பு இருந்தது.. அதனால், அவர்கள் இருவரும் நோயின் தாக்கம் அதிகரித்துதான் இறந்தனர்" என்று விளக்கம் தந்துள்ளது.
எனினும், ஒரே ஆஸ்பத்திரியில் கரண்ட் போன அன்றே 3 பேர் உயிரிழந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.