ஏய்.. பீடி கொடு.. முடியாது.. கொடு.. முடியாது.. சண்டை.. கடைசியில் கொலை!
பீடி கேட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்: மது போதை தலைக்கேறி விட்டால் கொள்ளையாவது, கொலையாவது.. எல்லாமே தறிகெட்டுதான் நடக்கும். அப்படிதான் தர்மபுரியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ராமியாம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. 47 வயதாகிறது. இவர் நேற்றிரவு மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கேபிள் பதிக்க குழிதோண்டும் வேலையை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் லட்சுமணன் என்பவரும் இந்த பணியை செய்து கொண்டிருந்தார். இரண்டு பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.
கல்லை போட்டார்
இந்நிலையில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு, அது பின்னர் தாக்குதலாக மாறி பிறகு ரணகளமாகிவிட்டது. ஆத்திரம் அடைந்த லட்சுமணன் பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கி முருகன் தலையில் போட்டுவிட்டு எஸ்கேப் ஆனார். அக்கம்பக்கம் இருந்தவர்கள் இருவருக்கும் நடந்த தாக்குதல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். ஆனால் எதற்காக பிரச்சனை என்று யாருக்கும் தெரியாது.
போலீசில் தகவல்
பொதுமக்கள் ஓடி வருவதற்குள் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்து கிடந்தார் முருகன். அதனால் அவரை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். எனவே உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
லட்சுமணன் கைது
விரைந்து வந்த போலீசார் இருவருக்கும் நடந்த தகராறு குறித்து விசாரித்ததில், பொதுமக்கள் தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்றனர். எனவே சம்பந்தப்பட்ட லட்சுமணனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வேலாயுதம்பாளையம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக லட்சுமணன் நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் லட்சுமணன் கூறியதாவது:
தகாத வார்த்தைகள்
"நானும் முருகனும் அன்னைக்கு வேலை முடித்துவிட்டு சரக்கு சாப்பிட்டோம். அப்போது என்னிடம் முருகன் பீடி வேண்டும் என்று கேட்டார். நான் இல்லை என்றேன். இதனால் என்னை அசிங்கமாக திட்டினார். அதனால் ஆத்திரம் அடைந்த நான் முருகன் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தேன்" என்றார். இதையடுத்து லட்சுமணனை போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.