வெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்
Recommended Video
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சத்தமே இல்லாமல், உலக சாதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் மற்றும் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைவிரல் ரேகையை வைத்து தேசியக் கொடி வடிவமைக்கபட்டது. இந்த கொடியானது 112 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.
உடுமலையில் அப்துல் கலாம் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் இந்த உலக சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 73 வது சுதந்திர தினம் என்பதால் 73 நபர்களை வைத்து அவர்களின் பெருவிரல் ரேகையில் தேசியக் கொடியை 26 நிமிடங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ரேகைகளை பதிய வைத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த உலக சாதனை முயற்சி, டிசிபி உலக சாதனை அமைப்பு நடுவர்களின் மேற்பார்வையில் நடந்தது. அப்துல் கலாம் உருவத்தைக் கொண்ட உடுமலை கலாம் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு இந்த சாதனையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
உடுமலைபேட்டையில் நிகழ்த்தப்பட்ட இந்த உலக சாதனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உலக சாதனை என்பது, உடனே நடந்து விடக்கூடிய விஷயம் அல்ல. அதற்கான, முயற்சியும், எழுச்சியும் வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார். தமிழகத்தில் இது போல இன்னும் பல சாதனை முயற்சிகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.