காலையிலேயே குடிச்சுட்டு குப்புறடிச்சு படுத்துக்கிட்டா எப்படி..கையில் கத்தியுடன் ரவுண்டு கட்டிய கவிதா
திருப்பூரில் டாஸ்மாக் எதிராக இளம்பெண் கத்தியுடன் போராட்டம் நடத்தினார்.
Recommended Video
திருப்பூர்: "வேலை வெட்டிக்கு போகாம, விடிகாலலையே என் புருஷன் தண்ணி அடிச்சிட்டு குப்புற படுத்துக்கிட்டா எப்படி" என்று கவிதா என்ற பெண் கையில் கத்தியுடன் டாஸ்மாக் கடை முன்பு ரவுண்டு கட்டி குடிகாரர்களை சரமாரியாக வெளுத்து வாங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த பெண் கவிதா. இவரது கணவர் வடிவேல், விடிகாலையிலே மது அருந்திவிட்டு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் வந்து போதையில் மயங்கி விழுந்துள்ளார். இவர்களுக்கு 2 சின்ன குழந்தைகள் இருக்கிறார்கள்.
தினமும் இப்படி வேலைக்கு போகாமல் வீட்டிலேயே போதையில் விழுந்துகிடப்பது கவிதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நேராக கணவன் மது அருந்திய டாஸ்மாக் கடைக்கு கவிதா கையில் கத்தியுடன் வந்துவிட்டார். உடனே டாஸ்மாக்கிலிருந்து குடித்துவிட்டு வெளியே வரும் ஆண்கள் உட்பட அங்கிருந்த பொதுமக்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
ஊட்டி விடுவோம்
"பால் கிடைக்குதா குழந்தைங்களுக்கு? அந்த அண்ணனை பாரு நிக்கக்கூடிய முடியல... காலைல வேலைக்கு போய்ட்டு மதியானம் வந்து குடிச்சிருந்தாகூட பொண்டாட்டி ஒத்துப்பா.. அதுக்குதான் கவர்ன்மென்ட் சட்டத்தையே மாத்தனாங்க. ஒரு திருப்தி இருக்கும். அதுவே ராத்திரி குடிச்சிட்டு வந்தா அதுக்கு மேல ஒரு சந்தோஷம் இருக்கும். காலைல இருந்து வேலை பார்த்துட்டு வந்து வீட்டுக்கு குடிச்சிட்டு வந்தாகூட, உடனே சோறு எடுத்துட்டு வந்து ஊட்டிக்கூட விடுவோம்.
படிப்பு செலவு
இப்படி காலைலயே குடிச்சிட்டு படுத்துக்கிட்ட சோத்துக்கு என்ன பண்ணுவாங்க? குழந்தைங்க என்ன பண்ணுவாங்க? எத்தனை பேர் பிள்ளைங்கள கவர்ன்மென்ட்ல படிக்க வெக்கிறாங்க. டாஸ்மாக்குல எடுத்துட்டு வந்து செலவு பண்றதுல, தான் குழந்தைங்க படிப்புக்கு செலவு பண்ணலாம் இல்லை? மெயின் ரோடுல டாஸ்மாக் வெக்க கூடாதுன்னா அங்கதான் கடைங்களை வெக்கிறாங்க...
சாப்பாடு இல்லை
மதியம் 12 மணியிலிருந்து ராத்திரி 10 மணி வரை கடை திறந்திருக்கே.. அப்பறம் ஏன் திருட்டுத்தனமான சாராயம் விக்கிறாங்க? நான் இப்படி நாய் மாதிரி கத்தறேன்.. அங்கே பிள்ளைங்க சாப்பாடு இல்லாம அழுதுட்டு இருக்குங்க" என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
கள்ளத்தனமாக விற்பனை
இதையடுத்து, அங்கேயே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் அங்கிருந்த ஆண்கள் அவரை சூழ்ந்துகொண்டு பல கேள்விகளை எழுப்ப தொடங்கினர். ஆனால் எதையுமே கண்டுகொள்ளாத கவிதா கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை எதிர்த்து, அரசுக்கு பல கோரிக்கைகளை வைத்தபடியே இருந்தார். பிறகு திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றார்.
அறிவுரை
பிறகு போலீசார் கவிதாவிடம், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனி அதிகாலையில் மது விற்பவர்களை கைது செய்வோம் என்றும் தெரிவித்தனர். மேலும் இப்படியெல்லாம் போராட்டம் செய்யக்கூடாது என்று கவிதாவுக்கு போலீசார் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்.