அதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
விழுப்புரம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழகத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. வேலூர் லோக்சபா தேர்தலுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது.
22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு, நிலையான ஆட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது நடக்கும் இரண்டு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற அவர் தீவிரமாக முயன்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த இரண்டு நாட்களாக தமிழக முதல்வர் பழனிச்சாமி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
விக்கிரவாண்டியில் தமிழக முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் பலர் ஆயிரக்கணக்கில் முதல்வரின் பிரச்சாரத்தை காண கூடி வருகிறார்கள். நேற்று மாலை முண்டியம்பாக்கம், ராதாபுரம் மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் தமிழ்நாடு முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அங்கு அவரின் பேச்சை கேட்க பெரிய அளவில் கூட்டம் சேர்ந்தது. அதேபோல் முதல்வரின் பேச்சை கேட்டு மக்கள் கைதட்டல் ஆரவாரம் செய்தனர். பொது மக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது :அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பளராக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் வெற்றிக்காக பாடுபட்டுவரும் அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எடப்பாடி பழனிசாமி விபத்தால் முதல்வர் ஆகி உள்ளார் என கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 122 சட்டமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் நான் முதல்வராகி உள்ளேன். ஆனால் ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவராக ஆனதுதான் விபத்து என்று சொல்ல வேண்டும். அவரது தந்தை கருணாநிதி சுமார் இரண்டாண்டு காலமாக பேசமுடியாத சூழ்நிலையில் கூட தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரவில்லை.
அவரது மறைவுக்குப் பிறகுதான் ஸ்டாலினால் கட்சித் தலைவராக முடிந்தது என்பதை அவர் மறந்து விடக் கூடாது. நான் 1989ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து கட்சிக்காக உழைத்ததின் பயனாக இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரும் தங்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதை ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் முதல்வராக பொறுப்பேற்றபோது இந்த அரசு 10 நாள் தான் நீடிக்கும், 6 மாதம் தான் நீடிக்கும், 1 ஆண்டுதான் நீடிக்கும் என தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் இந்த அரசு மக்கள் ஆதரவுடன் 2 ஆண்டுகள் 8 மாதம் வெற்றிகரமாக ஆட்சியை முடித்துள்ளது.
எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட இந்த இயக்கம், ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படக் கூடிய இயக்கமாக இன்று உருவெடுத்துள்ளது. ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து அதன் மூலம் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற கனவு, ஒருபோதும் நடக்காது. இந்த ஆட்சியை யாராலும், ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. ஜெயலலிதா மக்களுக்காக என்னென்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தார்களோ, அந்த திட்டங்கள் அனைத்தும் இன்றும் அம்மாவுடைய அரசு வழங்கி வருகிறது.
ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு ஊழல் அரசு என கூறிவருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசு தான் தி.மு.க. தி.மு.க ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. அதை மறைத்து இருந்த பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. அதை மறைத்து ஸ்டாலின் அ.தி.மு.க-வை பார்த்து ஊழல் ஆட்சி என கூறிவருவது மிகுந்த வேடிக்கையாக உள்ளது. முன்னாள் அமைச்சர்களான துரைமுருகன், ஏ.வ.வேலு, பொன்முடி ஆகியோர்களுக்கு கல்லூரிகள் உள்ளது. இந்த கல்லூரிகள் கட்டுவதற்கு அவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது. இந்த பணம் எல்லாம் மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்து பெறப்பட்டதாகும். இவர்கள் என்ன, டாடா பிர்லா குடும்பத்தைச் சார்ந்தவர்களா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 2021லும் அ.இ.அ.தி.மு.க தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
விவசாயிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக இந்த அரசு நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 2017ஆம் ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் இருந்து கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு 1,514 ஏரிகள் தூர்வார ரூ.328 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,829 ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் நிச்சயம் மேம்பாடு அடையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மக்காச்சோளப் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு பெரும்பாலான விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மூலமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளித்து பயிர்களைக் காப்பாற்ற ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள், பழங்களை பயிரிடுகிறார்கள். அவர்களுக்கு நியாயமான விலை கிடைத்திட வேண்டும் என்பதற்காக திண்டிவனம் அருகே உணவுப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. ஏழை, என்பதற்காக திண்டிவனம் அருகே உணவுப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
ஏழை, எளிய மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் மடிகணினி வழங்கப்படுகிறது. இதுவரை 48 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6,812 கோடி செலவிடப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள ஏழைப் பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1/2 பவுன் தங்கம் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்கள். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஒரு பவுனாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் அந்த திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு கேபிள் டி.வி கட்டணத்தை குறைப்போம் என நான் அறிவித்தேன். அதன்படி தற்போது அரசு கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 சவரனுக்கு கீழ் வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ள கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும், விவசாயிகளுக்கு மாதம் ரூ.6,000 வழங்கப்படும் எனவும் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து வெற்றிபெற்றார். ஆனால் தற்போது அவருடைய பொய் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடவில்லை.
அ.இ.அ.தி.மு.க-வின் மீதும், இந்த அரசின் மீதும் மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே, நடைபெறவுள்ள இந்த தொகுதி இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற குடியாத்தம் சட்டமன்ற தேர்தலில் 28,000 வாக்குகள் தி.மு.க. அதிகம் பெற்று வெற்றி பெற்றது. ஆனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க-வை விட திரு.ஏ.சி.சண்முகம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.
இதிலிருந்து மக்களின் மனநிலையை நன்கு தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டை ஆளுகின்ற தகுதி உள்ள ஒரே கட்சிஅ.இ.அ.தி.மு.க தான். இந்த ஆட்சியில் தான் மக்களுக்கு எண்ண ற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஒரு நம்பர் தான் அதிகரிக்கும். ஆனால், இந்த தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேறும். ஸ்டாலின் அவர்கள் திண்ணைப் பிரச்சாரம் செய்வதாக மக்களை ஏமாற்றி வருகிறார்.
இவர் துணை முதலமைச்சராக, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, திண்ணைப் பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் ஒரு கண்துடைப்பு நாடகம் ஆகும். இதை எல்லாம் மக்கள் ஒருபோது நம்பமாட்டார்கள். ஸ்டாலின் மனுக்களைப் பெற்று யாரிடம் அளிக்கப்போகிறார். அவர் அரசிடம் தானே அளிக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை அரசு தான் நிறைவேற்ற முடியும். இவர் எதிர்க் கட்சி தலைவர், இவரால் எதை நிறைவேற்றி தர முடியும். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற்றால், அவரால் இந்த தொகுதியில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா, மக்களின் பிரச்சனைக்காக அவர் என்னை வந்து சந்திப்பாரா? என்பதை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிராமத்தில் பாம்பையும், கீரியையும் சண்டையிடச் செய்வதாக கூறுவான், ஆனால் கடைசி வரை பாம்பையும், கீரியையும் சண்டையிடச் செய்யமாட்டான் ஏன் என்றால், கீரி, பாம்பை கடித்து போட்டுவிடும் அந்த கதையாகத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என கூறுகிறார். ஆனால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒருபோதும் தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியாது என்பதை நான் ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். ஸ்டாலினுக்கு பொய்தான் மூலதனம் அதனால் தான் அவர் மக்களிடத்தில் மதிப்பைப் பெறமுடியவில்லை .
தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. தந்தை, அவருக்குப் பிறகு அவரது மகன், தற்போது பேரன் என வாரிசு அரசியல் நடைபெறுகிறது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு பேச முடியாத சூழ்நிலையில் இருந்தார். அப்போது அவரது தந்தையை யாரும் பார்க்க இவர் அனுமதிக்கவில்லை ஏனென்றால், அவரது குடும்பத்தில் அண்ணன், தம்பி என உச்சகட்ட மோதல் இருந்தது.
செயல் தலைவராக ஸ்டாலின் இருந்தார். ஆனால் கருணாநிதி அவர்கள் தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு அளிக்கவில்லை. ஏனென்றால் ஸ்டாலின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை. தந்தையே இவரை நம்பாத போது நாட்டு மக்கள் இவரை நம்பி எப்படி வாக்களிப்பார்கள் என்பதை வாக்காளராகிய நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இந்தப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதி, நானும் ஒரு விவசாயி. உங்கள் பிரதிநிதியாக நான் முதலமைச்சராக உள்ளேன். விவசாயிகளுக்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் நான் அறிவித்த திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்தன் கால்வாயை ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்,
இதன் மூலம் விக்கிரவாண்டியில் உள்ள பனமலைப்பேட்டை ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 ஏரிகள் மூலம் சுமார் 3000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், சாத்தனூர் அணையின் உபரி நீரை கூடுதலாக நந்தன் கால்வாயில் கொண்டுவருவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் நல்லவர், வல்லவர், பண்பாளர் இந்தப் பகுதியைச் சார்ந்தவர். அவருக்கு எம்.ஜி.ஆர். கண்ட, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், என்று முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் முதல்வர் பழனிசாமி திமுக குறித்து பேசும் போதும், அதிமுகவின் நிலையான ஆட்சி குறித்து பேசும் போதும் விசில் பறந்தது. இதேபோல் முதல்வர் பழனிசாமி இந்த வாரம் நாங்குநேரி தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த இரண்டு பிரச்சாரமும் தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RECOMMENDED STORIES