மருத்துவ துறையில் புதிய உயரம்.. காப்பீட்டு திட்டத்தில் புது பாய்ச்சல்.. கலக்கும் தமிழக அரசு!
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மருத்துவ துறையிலும் காப்பீட்டு திட்டங்களிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
மருத்துவ துறையின் வளர்ச்சிக்கும், மக்கள் எளிதாக குறைந்த விலையில் அல்லது விலையே இல்லாமல் சிகிச்சை பெறுவதும் தமிழக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. சென்னைதான் இந்தியாவின் மருத்துவ தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னையில் மருத்துவம் வேகமாக வளர்ந்துள்ளது.
தமிழகம் மருத்துவ துறையில் வளர்ந்து இருக்க திராவிட கட்சிகள்தான் காரணம். அதிமுக கட்சி மிக தீவிரமாக தமிழகத்தில் மருத்துவ துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதேபோல் பதவி ஏற்றதில் இருந்து கடந்த இரண்டரை வருடமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக மருத்துவம் சார்ந்து அறிவிப்புகளை, காப்பீட்டு திட்டங்களை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி தற்போது முதல்வர் பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசால் அறிவிக்கப்பட்ட ''முதல்வர் காப்பீட்டு திட்டங்களை'' தீவிரமாக பின்பற்றி வருகிறார். 2012 முதல் 2016 வரை 4 ஆண்டு மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் அறிவிக்கப்ட்டது. அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு, தற்போது தமிழக முதல்வர் பழனிசாமியால் தீவிரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்வரின் இந்த விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் சுமார் 1.80 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெற முடியும். இதற்காக தமிழக அரசு சார்பாக CMCHISTN இணையம் மூலம் முழு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை ஒரு குடும்பத்திற்கு வழங்க முடியும். இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேர உதவி மையங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் அடையும் வகையில்தான் இந்த காப்பீட்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் மீதுதான் இதில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளும், 1027 சிகிச்சை முறைகளும், 38 புது சிகிச்சை முறைகளுக்கும் இந்த காப்பீடு பொருந்தும் .
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி ஆட்சியின் கீழ், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த வருடம் ஜூலை மாதம் 18 குழந்தைகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. காதுவால்வு நரம்பு சிகிச்சை, உள்வைப்பு அறுவை சிகிச்சை, இருதயம், வளைபாதம் அறுவை சிகிச்சை 18 குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த குழந்தைகளுக்கு, காது உள்வைப்பு கருவிக்கான உதிரி பாகங்களை முதல்வர் இலவசமாக வழங்கினார்.
அதேபோல் மருத்துவத்துறையில் முக்கியமானதாக கருதப்படும் பொது சுகாதாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. 9 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார கட்டடங்களை கோயம்புத்தூர், தூத்துக்குடி, நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இந்த வருடம்தான் முதல்வர் திறந்து வைத்தார்.
கோவையில் பல்வேறு ஊர்களில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 9 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இது இல்லாமல் மருத்துவ துறையில் அரசு ஊழியர்களுக்கு தனியாக காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் காப்பீட்டுத்தொகை வழக்கும் வகையில் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக அரசு ஊழியர்கள் மாதம் 10 ரூபாய் பணம் கொடுத்தால் போதும்.
அவர் தங்கள் சிகிச்சையில் 75% வரை இதன் மூலம் காப்பீடாக பெற முடியும். முக்கியமாக பெரிய நோய்களுக்கு தமிழக அரசு சார்பாக நிறைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தன் பங்காக ரூ.17 கோடியே 90 லட்சத்தை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது. இது மட்டுமின்றி தமிழக அரசு சார்பாக பல்வேறு மாவட்டங்களில் வரிசையாக மருத்து கல்லூரிகள் திறக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பாக கரூர் சனபிரெட்டி கிராமத்தில் 269 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு அரசாணை 27.6.2018 அன்று வெளியிடப்பட்டது. அதேபோல் திதாக தோற்றுவிக்கப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 115 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த வருட பட்ஜெட்டில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருட பட்ஜெட்டில் ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்.
ரூ.24 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் ரூ.66.50 கோடியில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கடந்த சில வாரங்கள் முன் மேற்கொண்ட லண்டன் பயணத்திலும் கூட மருத்துவமனைகளை பார்வையிட்டு, அது தொடர்பான முதலீடுகள் குறித்து ஆலோசனை செய்தார். அங்கிருக்கும் மருத்துவ வசதிகளை தமிழகத்திற்கும் கொண்டு வருவோம் என்று முதல்வர் குறிப்பிட்டு இருக்கிறார்.
RECOMMENDED STORIES